நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆட்சி

நரசிம்மராவ் ஆட்சி மற்றும் மன்மோகன் சிங் தலைமையிலும் அன்னை சோனியா காந்தி அவர்களின் வழிகாட்டுதலிலும் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி

பொருளாதார சீர்த்திருத்தம்

மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில், 1991 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். பிவி.நரசிம்ம ராவ். தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலாக பிரதமரானது 1991 ஆம் ஆண்டில் தான். 

அவரது முதல் பணியே, 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியின் அறிவுரையின் பேரில் தயாரிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு தொடரவேண்டும் என்பதே. 

இந்தியப் பொருளாதாரத்தை தாராளமயமாக்குதலுக்கான நடவடிக்கைகளும், உலகமயமாக்குதலின் ஆரம்ப நடவடிக்கைகளும் 1980 ஆம் ஆண்டிலேயே இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, அதை ராஜீவ் காந்தி தொடாந்து செயல்படுத்தினார். 

நரசிம்மராவ் காலத்தில் இத்தகைய நடவடிக்கைகளுக்கு மேலும் ஊக்கம் கொடுக்கப்பட்டது. இந்தியா அச்சமயத்தில், முந்தைய விபி.சிங் அரசின் மெத்தனத்தில் மிகுந்த பொருளாதார சிக்கலில் இருந்தது. 

ஏற்றுமதி-இறக்குமதிக்கான நிதிநிலைமை மிகவும் நெருக்கடியில் இருந்தது. பிற நாடுகளில் வாங்கியிருந்த கடன்களை திருப்பிக் கொடுப்பது என்பது மிகவும் கடினமாக இருந்தது. 

பணவீக்கம், 1991 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16 சதவீதமாக இருந்தது தொழில் உற்பத்தி கிட்டத்தட்ட நின்று போயிருந்தது. ஏற்றுமதியும் மிகவும் குறைந்து விட்டது. 

1991 ஆம் ஆண்டு ஜுன் மாதம் அந்நிய செலவாணி கையிருப்பு வெறும் 1000 கோடி ரூபாயாக இருந்தது. இது ஒருவார இறக்குமதிச் செலவுக்கு மட்டும் போதுமானதாக இருந்தது.ரிசர்வ் வங்கியில் வைத்திருந்த வைப்புத் தங்கத்தை (Balance of Payment) அடமானம் வைத்திடும் நிலை ஏற்பட்டது. 

ராஜீவ் காந்தி உயிருடன் இருந்த பொழுது இந்த நிலைகளை உணர்ந்திருந்தார். அதனால் அவர் காலத்திலேயே கீழ்கண்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன. 

தொழில்துறையில் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை தளத்துவது. (Deregulation of Industry) ஏற்றுமதி கட்டணங்களில் ஏற்ற இறக்கத்தை எளிதாக அனுமதித்தல். (Flexibility of Exchange Rates) இறக்குமதி கட்டுப்பாடுகளை ஒரளவு தளர்த்தல். (Partial Lifting of Import Control) 

தற்பொழுது நரசிம்மராவ், 1991 ல் ஏற்பட்டிருந்த பொருளாதாரச் சரிவினை ஏற்படுத்திட, முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னரும், முன்னாள் திட்டக் கமிஷன் துணைத்தலைவரும், பொருளாதார மேதையுமான டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை நிதியமைச்சராக நியமித்தார். 

‘இதனை இதனால் முடிக்கும் என்றாய்ந்து 

அதனை அவன்கண் விடல்’ – என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார் டாக்டர் மன்மோகன்சிங். 

நிதிப்பற்றாக்குறை, ஜிடிபியில் 8 சதவீதம் ஆக இருந்தது. இதைச் சரிப்படுத்திட கீழ்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுத்தார் டாக்டர் மன்மோகன் சிங்.

பொதுத்துறையின் பங்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை தனியாருக்கு விற்றல். அடிப்படைக் கட்டமைப்புகளுக்கான முதலீடுகளை அதிகரித்தல். வணிக முறைகளில் சீர்த்திருத்தங்களை ஏற்படுத்துதல். வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கான (எப்டிஐ) ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகளில், மாற்றங்கள் கொண்டு வருதல். தொழில்துறை கட்டுப்பாடுகளை தளர்த்துதல். 

இவை போன்ற பல நடவடிக்கைகளை எடுத்து, இந்தியப் பொருளாதாரத்தை சமநிலைக்குக் கொண்டு வந்தார் டாக்டர் மன்மோகன் சிங். 

இத்தகைய பொருளாதார சீர்த்திருத்தங்கள் பலருடைய கண்டனத்துக்கு ஆளாயின. நேரு காலத்து சோஷலிசக் கொள்கைகளிலிருந்து மாறுபட்டு விட்டது என்று கூட குற்றம் சாட்டினார்கள். 

ஆனால், 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் திரு.பிரணாப் முகர்ஜி பேசுகையில், ‘நேருவின் சோஷலிஸம் என்பது, மக்கள் எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்‘ என்ற எண்ணத்தில் ஒரு சமூகத்தின் பார்வை இருந்திட வேண்டும் என்ற அடிப்படையில் உள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் நேருவகுத்த பாதையையே இன்றும் பின்பற்றிடவேண்டும் என்ற உறுதி படைத்துள்ளது. 

ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோஷசலிஸம், திட்டமிடுதல், அணிசேராக் கொள்கை, பிறர் உதவியின்றி தன்னையே நம்பிருந்தல் ஆகியவையே, நேரு வகுத்த காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கொள்கைகளாகும். அதற்காக, பிறர் உதவியின்றித் தன்னையே சார்ந்திருக்கும் பொருளாதாரம் என்பது தன்னை, உலகின் ஏனையப் பகுதிகளின் பொருளாதாரச் செயல்பாடுகளில் விலகியிருந்திட வேண்டும் என்று அர்த்தமாகாது. 

தன்னையே சார்ந்திருப்பது என்பது இந்தியத் தொழில்துறையானது, ஏனைய நாடுகளில் தொழில்துறைகளில் ஏற்படும் போட்டிகளை ஒரு சவாலாக ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு போட்டிகளை ஒரு சவாலாக ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு வளர்ந்திட வேண்டும் என்று தான் அர்த்தம் கொள்ளவேண்டும். 

உண்மையில், நேருவின் பொருளாதாரக் கொள்கைதனை, காலத்திற்கேற்ப இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் மாற்றியுள்ளார்கள். இந்தியா சுதந்திரம் பெற்ற நேரத்தில், அந்நிய ஆதிக்கத்தின் சுரண்டலால், இந்தியத் தொழில்துறை மிகவும் வலிமையற்றிருந்தது. அதனால் அதற்கு அப்பொழுது தொழில்துறைக்கும் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளுக்கும் அரசின் ஆதரவு தேவையாக இருந்தது. 

ஆனால், இன்று வலிமை பெற்றுவிட்டது. அரசின் உதவியில்லாமலேயே தொழில்துறை வளர்ச்சி பெறும் கட்டத்திற்கு வந்துவிட்டது. அதே நேரத்தில், அரசும் பொருளாதார வளர்ச்சிக்குண்டான வழிமுறைகளையும் வகுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையும் வந்துவிட்டது. 

காங்கிரஸின் பொருளாதாரக் கொள்கை என்பது ஏற்கனவே கடைப்பிடித்து வரும் கொள்கைகளை நிலைநிறுத்தி, காலத்திற்கேற்ப மாற்றங்களையும் உட்புகுத்திட வேண்டும் என்ற அடிப்படையில் தான் வகுக்கப்படும்‘ என்று கூறினார்.

டாக்டர் மன்மோகன்சிங் கொண்டு வந்த சீர்திருத்தங்கள், அதனால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்.

வெளிநாட்டு நிறுவனங்கள், நமது நாட்டில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து இணைந்து செயல்பட்டிருக்கும் பொழுது, முதலீட்டின் உச்சவரம்பு 51 சதவீதம் என்ற அளவில் உயர்த்தப்பட்டன.

அந்நிய நேரடி முதலீடுகள் செய்யப்படுவதற்கான அனுமதி மற்றும் வழிமுறைகள் எளிதாக்கப்பட்டன.

வணிக வரிக் கட்டணங்கள் 85 சதவீதத்திலிருந்து 25 ஆக குறைக்கப்பட்டது.

தொழிற்சாலைகளுக்கு உரிமங்கள் வழங்கப்படும் முறைகளில் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டன.

தொலைத்தொடர்பு, ஆயுள் காப்பீடு ஆகிய துறைகளில் அரசு கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டன.

இதன் விளைவுகள்

1991 – 1992 ஆம் ஆண்டு 2 கோடி டாலராக இருந்த அந்நிய முதலீடு 1995 – 96 ல் 530 கோடி டாலராக உயர்ந்தது. பணவீக்கம் 9 சதவீதமாகக் குறைந்தது. விமானத்துறை, தொலைத்தொடர்புத் துறை ஆகியவற்றின் வளர்ச்சி பாராட்டும் வகையில் இருந்தது. இந்த மாற்றம், சமீப காலங்களில் பல நாடுகளில் ஏற்பட்ட அதிக வேகமான பொருளாதார வளர்ச்சிககைளக் காட்டிலும் மிக அதிவேகமான வளர்ச்சி எனப் பொருளாதார நிபுணர்களால் கருதப்பட்டது. உலகையே பிரமிக்க வைத்தது. இந்தப் பொருளாதார வளர்ச்சியானது, ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு மற்றும் மகளிர்க்கு ஆளுமை தருமளவில் பயன்பட்டது. 

1992 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பஞ்சாபில் குடியரசுத் தலைவர் ஆட்சி, ரத்து செய்யப்பட்டு, சட்டமன்றத்திற்கு தேர்தல்கள் நடத்தப்பட்டது. காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பியென்சிங் முதல்வரானார். காவல்துறை திறம்பட செயல்பட்டு காலிஸ்தான் தீவிரவாதத்தை அறவே ஒழித்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி, விஹெச்பி, அயோத்தியில் பெருந்திரளான கரசேவர்களை கூட்டி வந்தது. அவர்கள் பாபர் மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கினர். உத்திர பிரதேசத்தில் பாஜக முதல்வர் கல்யாண்சிங் இதற்கு உடந்தையாக இருந்தார். 

பாபர் மசூதி இடிக்கப்பட்டதால், நாடெங்கிலும் மதக்கலவரங்கள் உண்டாகின. டெல்லி, மும்பை, கல்கத்தா, அகமதாபாத், ஹைதராபாத், போபால் ஆகிய இடங்களில் நடைபெற்ற கலவரங்ளை அடக்க ராணுவம் விரைந்தது. 

1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி 73 மற்றும் 74 வது சட்டத்திருத்தங்கள் அமுலுக்கு வந்தன. இதற்கு பஞ்சாயத்து ராஜ் சட்டம் என்று பெயரிடப்பட்டது. ராஜீவ் காந்தியின் கனவு நனவாயிற்று. 

நரசிம்மராவ் தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசின் சாதனைகளில் சில:

உச்சநீதிமன்ற உத்தரவின் படி, மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் 27 சதவீதம் ஒதுக்கீடை உறுதி செய்தது.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் (National Commission for Backward Classes) நிறுவப்பட்டது.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி ஆணையம் (Backward Classes, Finance and Development Corporation) அமைக்கப்பட்டது.

டாக்டர் அம்பேத்கர் நிறுவனம் அமைக்கப்பட்டது.

லக்னோவிலிருக்கும் டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் மத்திய பல்கலைக்கழகமாக அந்தஸ்து உயர்த்தப்பட்டது.

வறுமைக் கோட்டிற்கு கீழேயுள்ள எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு வீடுகள் கட்டித் தருவதற்காக ‘இந்திரா காந்தி அவாஸ் யோஜனா’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

நாட்டின் பொருளாதாரத்தையே உயர்த்திக் காட்டிட வழிவகுத்தது இந்த அரசு. 

2004-ல் அன்னை சோனியா காந்தி வழிகாட்டுதலோடு டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்ற மத்திய காங்கிரஸ் அரசின் மகத்தான பத்தாண்டு சாதனைகள்:

கல்வி உரிமைச் சட்டம்

குழந்தைகளுக்கான இலவசம் மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டம் 2009 ல் நிறைவேற்றப்பட்டு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப் பட்டது. 6 முதல் 14 வயதுடைய ஒவ்வொரு குழந்தைக்கும் இலவசக் கட்டாயக் கல்வி வழங்க இந்தச் சட்டம் வழி செய்கிறது. இச்சட்டத்தினால் இடைநிலை மற்றும் உயர் கல்வி அளவில் பள்ளியிலிருந்து மாணவர்கள் பாதியிலேயே விலகிவிடுவது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. 

முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் (1951-56) கல்விக்கான ஒதுக்கீடு ரூ.15 கோடி அளவில்தான் இருந்தது. அது 11 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் (2007-2015) ரூ.2,69,873 கோடியாக உயர்ந்தது. இத்தகைய முதலீடுகள் காரணமாக மாணவர்களின் இடைநிறுத்தல், 2005 ல் 134.6 லட்சமாக இருந்தது. 2009-ல் 81.5 லட்சமாகக் குறைந்தது. 

பத்தாண்டுகளுக்கு முன்பு, தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.10,145 கோடி. தற்போது மத்திய அரசு ஒதுக்கி இருக்கிற தொகை ரூ.79,451 கோடி. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் அதிக நிதி, கிட்டத்தட்ட பத்துமடங்கு உயர்த்தப்பட்டதால், இந்தியாவில் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2001-ல் படித்தவர்கள் எண்ணிக்கை 64.84 சதவிகிதமாக இருந்தது. அது 2011 ல் 74 சதவிகிதமாக உயர்ந்தது. 

கல்வி உரிமைச் சட்டம் நிறைவேற்றிய பிறகு, 30, 888 ஆரம்ப நிலைப் பள்ளிக் கட்டடங்கள்: 10, 644 உயர்நிலைப் பள்ளிக் கட்டடங்கள்: 6,88,385 கூடுதல் வகுப்பறைகள்: 5,18,700 கழிப்பறைகள்: 7,00,485 ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டன. கட்டாய இலவசக் கலவி உரிமைச்சட்டத்தால், 19.97 கோடி குழந்தைகள் கல்வி பெறுகிற உரிமையைப் பெற்றுள்ளனர். இது கல்வித் துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய புரட்சியாகும்.

உயர் கல்வி வசதிகள்:

மத்திய அரசு கல்விக்கு முன்னுரிமை கொடுத்து, நிதி ஒதுக்கிய காரணத்தால், உயர் கல்வியில் சேருகிற மாணவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு கூடியுள்ளது. 2004-2013 காலகட்டத்தில் மத்தியப் பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை 17 லிருந்து 44 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் (IIT) 7 ஆக இருந்தது. தற்போது மேலும் 9 தொடங்கப்பட்டுள்ளன. இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களின் (IIM) எண்ணிக்கை 6 லிருந்து 13 ஆக அதிகரித்துள்ளது.

கல்விக் கடன்:

பத்தாண்டுகளுக்கு முன்பு, வங்கிகளில் கல்விக்கடன் என்பது எவரும் எளிதில் பெறமுடியாத, அரிதிலும், அரிதானதாக இருந்தது. மத்திய காங்கிரஸ் அரசு அறிமுகம் செய்த கல்விக்கடன் டிசம்பர் 2013 நிலவரப்படி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 25 லட்சத்து 70 ஆயிரத்து 254 மாணவர்கள் பெற்ற கடன் நிலுவைத் தொகை ரூபாய் 57 ஆயிரத்து 700 கோடியாகத் தற்போது உள்ளது. 

இந்தக் கடன் உதவி மூலமாக ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய சமுதாயத்தைச் சோந்த ஏழை எளிய மக்கள் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், மேலும் உயர்கல்வி படித்து பட்டம் பெற்று வாழ்க்கையில் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்று வருகின்றனர். 

தமிழ்நாட்டிலுள்ள 522 பொறியியல் கல்லூரிகளில் 2 லட்சம் இடங்கள் உள்ளன. இதில் 1.5 லட்சம் மாணவர்கள் படித்து பொறியியல் பட்டதாரிகளாக வெளியே வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய அரசின் கல்விக்கடன் பெற்று பயனடைந்தவர்கள். 

அன்று காமராஜர் தொடங்கி வைத்த ‘கல்விப் புரட்சி’ இன்று பலனைத் தந்து கொண்டிருக்கிறது. 

கல்விக்கடன் பெற்றவர்கள் செலுத்தாமல் நிலுவையில் உள்ள வட்டித்தொகையைச் செலுத்துவதற்கான பொறுப்பை மத்திய அரசே ஏற்றுக் கொள்வதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார். இந்த அறிவிப்பினால், கிட்டத்தட்ட 9 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக நடப்பு நிதியாண்டிலேயே ரூ.2,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதிய உணவுத் திட்டம்:

இந்தியாவிலுள்ள 12.66 லட்சம் பள்ளிகளில் மதிய உணவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பெருந்தலைவர் காமராஜர், 1960 களில் தமிழகத்தில் கல்விப்புரட்சியை ஏற்படுத்துவற்காக இலவசக் கல்வியை வழங்கியதோடு, இலவச மதிய உணவுத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். இதனால் அவர், ‘பகல் உணவு தந்த பகலவன்’ என்று பெருமையோடு அழைக்கப்பட்டார். இத்திட்டத்திற்காக 2013-14 ல் ரூ.13,215 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கியது. இத்திட்டச் செலவை மத்திய மாநில அரசுகள் 75:25 என்கிற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். 

தொடக்கப் பள்ளியில் ஒரு மாணவருக்கு வழங்கப்படும் மதிய உணவுக்கான செலவு ரூ.2.69. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.2.02. மாநில அரசின் பங்கு ரூ.0.67 ஆகும். மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 12 கோடி பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த சூடான உணவு வழங்கப்படுகிறது. 2004 லிருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் மதிய உணவுத் திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு 6 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிலவுரிமையைக் காக்கும் சட்டம்:

தொழில் வளர்ச்சி மற்றும் பல்வேறு அரசு திட்டங்களுக்காக விவசாயிகளின் நிலத்தைக் கையகப்படுத்துவதில் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையைப் போக்க 1894 ல் ஆங்கிலேயர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது தான் நிலம் கையகப்படுத்தும் சட்டமாகும். இந்தப் பழைமையான சட்டத்தால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வந்தனர். 

விவசாயிகளின் அநீதியைத் துதை;தெறிய இளந்தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாகக் கொண்டு வரப்பட்டது தான் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் குடியமர்த்தல் சட்டம் – 2013.

வறுமையை ஒழித்த மகத்தான திட்டம்:

கிராமப்புற மக்களிடையே நிலவுகிற வேலையில்லாத் திட்டத்தைப் போக்குகிற வகையில், 2006 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் அரசு கொண்டுவந்த திட்டம் தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம். ஒரு நிதியாண்டில் 100 நாள்கள் வேலைவாய்ப்பை வழங்கி, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை வளர்த்து வருகிறது.

உணவுப் பாதுகாப்புச் சட்டம்:

அன்னை சோனியா காந்தி அவர்களின் கனவுத் திட்டம் தான் உணவுப் பாதுகாப்புச் சட்டம். கடந்த சில வருடங்களாக இச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் ஏராளம். இச்சட்டத்தை நிறைவேற்றியதற்காக அன்னை சோனியாவை ‘மணிமேகலை’, ‘அன்னபூரணி’ என்றும் வாய்மணக்க அழைத்து மகிழ்ச்சியடைந்தார்கள். 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப் பட்டு, 81 கோடி மக்களுக்கு ஒரு கிலோ கோதுமை ரூ.2, ஒரு கிலோ அரிசி ரூ.1 என்கிற அளவில் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு 5 கிலோ வீதம் உணவுத் தானியங்கள் வழங்குவது சட்டபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாய விலை:

2003-04 ல் ஒரு குவிண்டால் நெல் விலை ரூ.550 ஆக இருந்தது. இது 2013-14 ல் ரூ.1,310 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 01.01.2013 நிலவரப்படி, 551.33 லட்சம் டன் உணவுத் தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. 2003-04 ல் உணவு மானியம் ரூ.25,183, 2013-14 ல் ரூ.90,000 கோடி. ஒரு டன் கரும்பின் விலை ரூ.695 லிருந்து ரூ.1,700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

விவசாயக் கடன்:

2003-04 ல் பாஜக தலைமையிலான மத்திய அரசில் ரூபாய் 83 ஆயிரம் கோடி தான் விவசாயக் கடன் வழங்கப்பட்டது. 2013-14 ல் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் ரூபாய் 7 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு மேலே தற்போது ரூபாய் 7 லட்சத்து 35 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி நினைவுக் குடியிருப்புத் திட்டம்:

இந்திரா ஆவாஸ் யோஜனா என்கிற இத்திட்டம் கிராமப் புறங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களுக்கு வீட்டு வசதிக்காகவும், வசிக்கும் வீட்டைப் புதுப்பிக்கவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டதின் மொத்தச் செலவையும் மத்திய மாநில அரசுகள் முறையே 75:25 என்கிற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன. இத்திட்டத்திற்கான பயனாளிகளைக் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் உள்ளிட்ட குழு தேர்ந்தெடுக்கிறது. 

இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ், வீடு பெறுபவர்களுக்கு ராஜீவ் காந்தி மின் வசதி திட்டத்தின் கீழ் இலவசமாக இணைப்புப் பெற முடியும்.

பிரதம மந்திரி கிராமச் சாலைத் திட்டம்:

பத்தாண்டுகளுக்கு முன்பு 51,511 கிலோ மீட்டர் நீளத்திற்கான கிராமப் புறச்சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போது 3 லட்சத்து 86 ஆயிரத்து 574 கிலோ மீட்டர் கிராமச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் அமைக்கப்பட்ட கிராமச் சாலைகளை விட ஏழுமடங்கு அதிகமாகும். இச்சாலைகளால் கிராமங்கள் அருகிலுள்ள நகரங்களோடு இணைக்கப்பட்டு, அந்தப் பகுதி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

தேசிய ஊரக சுகாதார இயக்கம் (NHRM) :

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் பல்வேறு சாதனைத் திட்டங்கள் அறிமுகம் படுத்தப்பட்டு, நிறைவேற்றப்பட்டு வந்தன. அதில் மிக முக்கியமானது, தேசிய ஊரக சுகாதார இயக்கம் ஆகும். 

கடந்த ஐந்தாண்டுகளில் தேசிய ஊரக சுகாதார இயக்கத்திற்காக மாநிலங்களுக்கு ரூ.71,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

கடந்த இரண்டாண்டுகளாகப் புதிதாகப் போலியோ நோய் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதே ஒரு சாதனை தான். சர்வதேச அரங்குகளில் இதற்குப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. 

ஜனனி சுரக்ஷா யோஜனா (JSS) என்கிற குழந்தைப் பேறு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு கோடி தாய்மார்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1,600 கோடி வழங்கி வருகிறது.

அங்கன்வாடி மையங்கள்:

நாடு முழுவதும் 13,31,000 அங்கன்வாடி மையங்களில் கிராமத்து பெண்மணி ஒருவர் பணியாளராகத் தேர்வு செய்யப்படுகிறார். இவர்கள் கிராமங்களிலுள்ள வீடுதோறும் சென்று கருவுற்ற பெண்களைப் பதிவு செய்தல், மருத்துவ உதவி செய்தல், பிரசவத்துக்குத் துணையாக இருப்பது போன்ற பணிகளைச் செய்கிறார்கள். இதனால், இவர் ‘ஆஷா’ என்று அழைக்கப்படுகிறார். இந்த மையங்களுக்கான திட்டச் செலவினமாக 2012-13 ஆம் ஆண்டில் ரூ.15,704 கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது. தற்போது நாடு முழுவதும் ஆஷா பணியாளர்களின் எண்ணிக்கை 9 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் (ICDS):

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்காக நடப்பாண்டில் ரூ.17,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2012-13 ல் ஒதுக்கியதை விட 11.7 சதவிகிதம் அதிகமாகும். இத்திட்டத்தின் கீழ் 27,000 புதிய அங்கன்வாடி மையங்களும் திறக்கப்பட்டு, மொத்த எண்ணிக்கை 13.3 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த அங்கன்வாடி மையங்கள் மூலம் 8 கோடியே 90 லட்சம் மகளிரும், குழந்தைகளும் பயனடைந்துள்ளனர்.

சிறுபான்மையினரின் நலன்:

சிறுபான்மையின் மக்களின் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு 2012-13 ல் ரூ.1,59,323 கோடி. சிறுபான்மை மக்களின் நலனுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது எப்போதுமே உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. 2004-05 லிருந்து சிறுபான்மை மக்களின் நலனுக்கான செலவுகள் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளன.

ஆதார் அடையாள எண்:

இந்தியாவிலுள்ள அனைத்துக் குடிமக்களுக்கும், தனித்தனி அடையாள எண் வழங்குவதற்கான திட்டமாகும். மத்திய அரசின் திட்டப்பயன்கள், பயனாளிகளுக்குச் சிந்தாமல் சிதறாமல் முழுமையாகப் போய்ச் சேருவதை உறுதி செய்யவே ஆதார் அடையாளத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

தகவல் தொழில் நுட்பம்:

பாரத ரத்னா ராஜீவ் காந்தி அவர்களின் தொலைநோக்குப் பார்வையின் காரணமாக அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் தொழில் நுட்பத் துறை நிகழ்கால இந்தியப் பொருளாதாரத்தையே தாங்கி நிறுத்தி வருகிறது. இன்றைய ஆண்டு வருமானம் 55 லட்சம் கோடி ரூபாயை எட்டியிருக்கிறது. 

இத்துறையின் மூலம் 28 லட்சம் தொழில் நுட்ப பட்டதாரிகள் வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர். இதன் மூலமாக வேலையின்றி இருந்த லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. நமது நாட்டின் பொருளாதாரத்தின் அடித்தளத்தை வலிiமைப் படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய புரட்சியை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்த நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இன்றைய இளைஞர்கள் பாராட்டி மகிழ்ந்து வருகின்றனர்.

தொலைத் தொடர்புத் துறையில் புரட்சி:

ஒரு காலத்தில் தொலைபேசி இணைப்பு பெறுவதற்குப் பத்தாண்டு காலம் காத்திருக்க வேண்டிய அவலநிலை மாறி, இன்றைக்கு அனைத்து மக்களும் பயன்படுத்துகிற அற்புத சாதனாக செல்பேசி திகழ்கிறது. தற்போது நம் நாட்டின் மொத்தத் தொலைபேசிகளின் எண்ணிக்கை 94 கோடி. இதில் செல்பேசி 90 கோடி. தொலைபேசி 4 கோடி.

நலிந்த பிரிவினருக்கு அதிகாரமும், வளர்ச்சியும் அளித்தல்:

2012-13 ல் பட்டியலினத்தவரின் துணைத்திட்டங்களுக்காக ரூ.37,113 கோடி ரூபாயும், பழங்குடியினரின் துணைத் திட்டங்களுக்காக 21,710 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் ஒதுக்கப்பட்டதை விட 18 சதவிகிதம் அதிகமாகும்.

நகர்ப்புற வளர்ச்சி:

2005 முதல் 2012 வரை செயல்படுத்த முடிவு செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புதுப்பிப்பு இயக்கம் 2014 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற கட்டமைப்பு வசதிகளுக்காக 2013-14 ல் ரூ.14,873 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நவீன பேருந்துகளை வாங்க 31 டிசம்பர் 2012 வரை ரூ.3,06,897 கேடி வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் நிதியாக ரூ.2,01,452 தரப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்பட்ட 16 லட்சம் வீடுகளில், 6 லட்சத்து 60 ஆயிரம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு, 4 லட்சத்து 37 ஆயிரம் வீடுகளில் பயனாளிகள் குடிபுகுந்துள்ளனர்.

ரயில்வே

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில், ரயில்கள் ஏற்றிச் செல்லும் சரக்குகளின் அளவு ஆண்டுக்கு 100 கோடி டன் என்ற அளவுக்கு இரு மடங்காக அதிகரித்துள்ளது.

மின்சாரப் பகிர்வு:

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் பொழுது, மத்திய தொகுப்பிலிருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம்: 

ஆந்திர மாநிலம்: 3,535 மெகாவாட்

தமிழ்நாடு: 3,396 மெகாவாட்

கர்நாடகா: 1,774 மெகாவாட்

கேரளா: 1,670 மெகாவாட்

புதுச்சேரி: 505 மெகாவாட்

கூடங்குளம் அணுமின் நிலையம் (1000 மெகாவாட்)

தமிழ்நாடு (25٪) – 463 மெகாவாட்

கர்நாடகா (10٪) – 221 மெகாவாட்

கேரளா (30٪) – 133 மெகாவாட்

புதுச்சேரி (35٪) – 32 மெகாவாட்

ஒதுக்கப்பட்டவை (15٪) – 150 மெகாவாட்

உலகத்தோடு இணைந்து வாழ்வோம்:

1998 முதல் 2004 வரை ஆறாண்டு காலம் மத்தியில் ஆட்சி செய்த பாஜக வின் சராசரி வளர்ச்சி விகிதம் 5.7 சதவிகிதம் தான். ஆனால், 2004 முதல் 2013 வரை ஒன்பதாண்டு காலம் ஆட்சி செய்யும் மத்திய காங்கிரஸ் அரசின் சராசரி வளர்ச்சி 8 சதவிகிதமாகும். இந்தச் சாதனையை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.