APR – 23

APR-23

      தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்களின் அறிக்கை

சேலம் – சென்னை எட்டு வழிச் சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டுமெனக் கூறி, திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து திருவண்ணாமலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நான் கூறிய கருத்துக்கள் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு சரியாக சென்றடையவில்லை எனக் கருதுகிறேன்.

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு சாலைகள் போடுவதை தடை செய்யவில்லை. சேலம் – சென்னை பசுமை வழிச்சாலையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வகுத்துள்ள எவ்வித நிபந்தனைகளையும் தமிழக அரசு பின்பற்றவில்லை என்பதே நீதிமன்றத் தீர்ப்பின் நிலைப்பாடாகும். மேலும், நிலம் வழங்கியவர்களுக்கான இழப்பீடு மற்றும் மறுவாழ்வு முறையாக அறிவிக்கப்படவில்லை. 2017 ஆம் ஆண்டு மத்திய அரசினால் அறிவிக்கப்பட்ட பாரத் மாலா பரியோஜனா திட்டத்தில் சென்னை – மதுரை நெடுஞ்சாலை திட்டம் தான் சேர்க்கப்பட்டதே தவிர, சேலம் – சென்னை 8 வழிச் சாலை திட்டம் சேர்க்கப்படவில்லை. மேலும், இது ‘ஏ” பிரிவு நெடுஞ்சாலை வகையைச் சார்ந்து. இது முற்றிலும் மத்திய அரசால் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டமாகும். இதற்கு பிரதமர் தலைமையிலான பொருளாதார குழு, இந்திய தலைமை மற்றும் கணக்காயர், சுற்றுச் சூழல் அமைச்சகம் ஆகியவற்றின் முன்அனுமதி அவசியம் பெற வேண்டும். ஆனால் இந்த அமைப்புகள் எதனிடமும் முன் அனுமதி பெறாமல் சேலம் – சென்னை எட்டு வழிச் சாலை நிறைவேற்றுவதற்கான ஆயத்த பணிகளில் மத்திய – மாநில அரசுகள் ஈடுபட்டன. ரூபாய் 10 ஆயிரம் கோடி முதலீட்டில் கொண்டுவரப்பட இருந்த எட்டு வழிச் சாலை திட்டத்தை ஒரு தனி மனிதரின் ஆதாயத்திற்காகவே தமிழக அரசு மிகுந்த அக்கறை காட்டியது.

விவசாய நிலங்களை கையகப்படுத்தும் போது அளிக்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையை நிலம் ஒப்படைக்கப்படுகிற அன்றே வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், அந்த நிலத்திற்கு ஈடாக வேறொரு நிலத்தை விவசாயிகளால் வாங்க முடியாது. வழங்கப்படுகிற நிலத்திற்கு இணையான நிலம் வாங்குவதற்கு ஏற்ற வகையில் இழப்பீட்டுத் தொகை இருக்க வேண்டும். இழப்பீட்டுத் தொகை குறைவாக இருக்குமேயானால் அதனால் எந்த பயனும் ஏற்படாது. இதனால் விவசாயிகளின் மறுவாழ்வு கடுமையாக பாதிக்கப்படும். விவசாய நிலங்களை கையகப்படுத்துகிற போது அரசும், சமூக ஆர்வலர்களும் கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான். ஆனால் இவையனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

பொது நன்மைக்காக விவசாய நிலங்களை எடுக்கக் கூடாது என்ற வாதம் சரியானதல்ல. அது தமிழகத்தின் வளர்ச்சியை பாதிக்கும். அந்த திட்டங்கள் வேறு மாநிலத்திற்கு சென்றுவிடும். எனவே, திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் போது அவர்களது ஒப்புதலோடு தான் பெறப்பட வேண்டும். சரியான இழப்பீடு கிடைக்குமெனில் நில உரிமையாளர்கள் நிலத்தை வழங்க தயாராகவே இருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள், சாலைகள், ரயில்வே பாதைகள், விமான நிலையங்கள் இவைகளெல்லாம் இந்த வகையில் தான் பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பா.ம.க. மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்த போது, திண்டிவனம், செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு ரயில்வே பாதை அமைக்க திட்டம் கொண்டு வந்தார்கள். அந்த ரயில் பாதை விவசாய நிலங்கள் வழியாகத் தான் போனது என்பதை எவரும் மறந்திட இயலாது. அப்போது விவசாய நிலங்கள் மீது காட்டாத அக்கறையை இப்போது டாக்டர் ராமதாஸ் காட்டுவது மிகுந்த வேடிக்கையாக இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை எந்த திட்டத்தையும் பா.ம.க.வைப் போல, அரசியல் ஆதாயத்திற்காக கண்மூடித் தனமாக எதிர்க்கிற கட்சி அல்ல. மக்களுக்காகத் தான் திட்டமே தவிர, திட்டத்திற்காக மக்கள் அல்ல. ஒரு திட்டத்தினால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற அடிப்படையில் எதிர்ப்பு எழுமேயானால் அந்த எதிர்ப்பை களைய வேண்டிய பொறுப்பு மத்திய – மாநில அரசுகளுக்கு இருக்கிறது. ஆனால் அதற்கு மாறாக திட்டத்தை மக்கள் மீது திணிக்க முற்பட்ட பாவத்தை பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் இணைந்து செய்ததை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள். இத்தகைய பாவத்தைச் செய்த கட்சிகளோடு கூட்டணி வைத்த மகாபாவத்தை பா.ம.க. செய்திருக்கிறது. அந்த பாவத்திலிருந்து மருத்துவர் ராமதாசோ, பா.ம.க.வோ விடுபட முடியாது.

டாக்டர் ராமதாஸ் தன்னுடைய டிவிட்டரில் என்னுடைய பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய கருத்திற்காக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைக் குனிய வேண்டுமென்று கூறியிருக்கிறார். தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் வழியில் வந்தவர் மு.க. ஸ்டாலின். அவர் ஒருபோதும் தலைக் குனிய வேண்டிய அவசியம் வராது. தமிழக அரசியலில் அவர் எப்போதும் வீறுநடை போடுவதற்கு உதவியாகவே என்னுடைய செயல்பாடு இருக்கும்.

      கத்தார் நாட்டில் உள்ள தோகாவில் நடைபெறும் 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2019 போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்திற்கான பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் பெற்று தந்திருப்பதற்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

– திரு கே. எஸ். அழகிரி,

தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

Leave a Reply