20/08/2025 அறிக்கை
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு. சுதர்சன் ரெட்டி அவர்களை இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாகவும் பொறுப்பு வகித்தவர். அதற்கு பிறகு சமூகநீதியை நோக்கமாகக் கொண்ட சமூகப் பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு தெலுங்கானாவில் இவர் தலைமையில் தான் நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பு இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது. அதையடுத்து ஊழல் கண்காணிப்பு அமைப்பான லோக் ஆயுக்தாவின் தலைவராக இருந்து செயல்பட்டவர். நீதிபதியாக இருந்து ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் உரிமைகளை அரசமைப்புச் சட்டத்தின்படி பாதுகாத்தவர். அத்தகைய கொள்கைப் பின்னணி கொண்ட ஒருவரை இந்தியா கூட்டணி வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் என்பது இரு கூட்டணி கட்சிகளுக்கிடையே நடைபெறுகிற தேர்தல் மட்டுமல்ல, இதுவொரு சித்தாந்த போர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியிருக்கிறார். இந்த சித்தாந்த போரை தனிநபர்களை வைத்து முடிவு செய்துவிட முடியாது. இந்த தேர்தலில் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதற்கொண்டு தென் மாநில மக்களின் உரிமைகளை பறிப்பதோடு, நிதிப் பகிர்வில் அப்பட்டமான பாரபட்ச போக்கை பிரதமர் மோடி அரசு கையாண்டு வருவதை அனைவரும் அறிவார்கள். இதற்கு காரணம் தென் மாநிலங்களில் பா.ஜ.க. காலூன்ற முடியாத நிலை உள்ளது. இதனால், தென் மாநிலங்களில் உள்ள மாநில கட்சிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா மூலம் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை பயன்படுத்தி கபளீகரம் செய்து தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கூட்டணி அமைக்கிற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களை தமிழர் என்பதற்காக ஆதரிக்க வேண்டுமென அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. இதே கோரிக்கை ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பாரத் ராஷ்ட்ரிய சமீதி, ஜனசேனா கட்சி ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி தெலுங்கர் என்பதற்காக ஆதரிப்பார்களா ?
இத்தகைய வாதம் எந்த வகையிலும் பொருளற்றதாகும். எந்த மாநிலத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், எந்த கட்சியின் சார்பாக போட்டியிடுகிறாரோ, எந்த கொள்கைகளை முன்னிலைப்படுத்துகிறாரோ, அதை வைத்து தான் ஒரு வேட்பாளரை முடிவு செய்ய முடியும். அந்த வகையில் சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழக நலன்களுக்கு விரோதமாக தமிழர் உரிமைகளை பறிக்கிற, நீட் தேர்வை திணிக்கிற, மும்மொழி திட்டத்தின் மூலம் இந்தியை புகுத்துகிற, நிதி பகிர்வில் தமிழகத்தை வஞ்சிக்கிற தமிழர்கள் விரோத கட்சியான பா.ஜ.க.வின் வேட்பாளர் என்பதை எவரும் மறந்திட இயலாது.
எனவே, இந்தியாவின் நலன்களுக்காக அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்பட்டுள்ள பேராபத்திலிருந்து பாதுகாப்பதற்கான முழு தகுதியுடைய நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி அவர்கள் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் என்பதால் அவரை ஆதரிப்பது தமிழ்நாட்டிற்கும் நல்லது, இந்தியாவிற்கும் நல்லது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
(கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.)