Oct – 26

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்கள் வெளியிடும் அறிக்கை.

பின்தங்கிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் வழக்கு தொடர்ந்திருந்தது. இதையும் நடப்பாண்டிலே அமல்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மருத்துவ படிப்பில் ஒபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை நடப்பாண்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தமிழக பின்தங்கிய சமுதாய மாணவர்களை கடுமையாக பாதிக்கக் கூடியதாகும்.

கடந்த ஜுலை 27 அன்று, மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய இடஒதுக்கீட்டில் 50 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டது. இத்தீர்ப்பில் இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு பிரதிநிதிகளும், தமிழக சுகாதாரத்துறை செயலாளரும் அடங்கிய குழுவினை அமைக்க வேண்டும்; 3 மாதங்களில் இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த சட்டம் கொண்டு வரவேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்த இடஒதுக்கீட்டை வழங்குவதற்கு அரசமைப்பு சட்டப்படியோ, வேறு சட்ட ரீதியான காரணங்களோ இதற்கு தடையாக இல்லை என்றும் தெளிவாக தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த தீர்ப்பின் பலன்களை உச்சநீதிமன்ற வழக்கில் தமிழக அரசு சரியாக நடத்தாத காரணத்தால் பாதகமான தீர்ப்பு இன்று கிடைத்திருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் கூறியபடி குழுவை அமைக்கவோ, மத்திய பா.ஜ.க. அரசுக்கு அழுத்தம் கொடுத்து இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக சட்டம் இயற்றவோ எந்த முயற்சியையும் அ.இ.அ.தி.மு.க. அரசு எடுக்கவில்லை. இதன்மூலம் உச்சநீதிமன்றத்தில் பாதகமான தீர்ப்பு கிடைத்ததற்கு அ.தி.மு.க. அரசின் அலட்சியப் போக்குத்தான் காரணம்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மத்திய அரசின் கல்வி நிலையங்களில் ஒபிசி மாணவர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்க சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் 2014 இல் 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டது. இத்தகைய தீர்ப்பின் மூலம் இதுவரை பெறப்பட்ட வந்த ஒபிசி மாணவர்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீடும் பறிக்கப்பட்டுள்ளது. மேலும், 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கவும் உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பின் காரணமாக தமிழகத்திலிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டில் வழங்கப்படும் 251 மருத்துவ இடங்களில் ஒபிசி மாணவர் ஒருவருக்குக் கூட இடம் கிடைக்காத நிலை உச்சநீதிமன்ற தீர்ப்பால் இன்று ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க. அரசு சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில் ஒபிசி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு எதிரான நிலை எடுத்த காரணத்தால்தான் இன்றைக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு உச்சநீதிமன்ற தீர்ப்பினால் மறுக்கப்பட்டுள்ளது.

தமிழக பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க. அரசு எடுத்த நிலையும், இந்த வழக்கை அலட்சியப் போக்குடன் நடத்திய அ.இ.அ.தி.மு.க. அரசும் தான் காரணம் என்று குற்றம் சாட்ட விரும்புகிறேன். பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவை சீர்குலைத்த மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழகத்தில் உரிய பாடம் புகட்டுவதன் மூலமே சமூக நீதியை பாதுகாக்க முடியும்.

Leave a Reply