02-Jan-2025
அறிக்கை
கர்நாடக இசையில் முற்போக்கான சிந்தனைகள், கருத்துகளை பரப்புகிற வகையில் முற்றிலும் மாறுபட்ட இசைக் கச்சேரிகளை நடத்தி, மக்களின் பேராதரவை பெற்று வருகிற திரு. டி.எம். கிருஷ்ணா அவர்களுக்கு மியூசிக் அகாடமியின் 98-வது ஆண்டு மார்கழி கச்சேரியின் போது அவருக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டிருப்பது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன், பாராட்டுகிறேன்.
பாரம்பரிய மரபுகளுக்கு மாறாக, துணிச்சலுடன் இசை கச்சேரிகளை நடத்தி வருபவர் திரு. டி.எம். கிருஷ்ணா. குறிப்பாக ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்கிற பகுதிகளிலும், மீனவர்கள் வாழ்கிற பகுதிகளிலும் கர்நாடக இசை கச்சேரிகளை நடத்தி அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றவர். அதேபோல, சமீபத்தில் பாரம்பரிய உடைகளுக்கு விரோதமாக லுங்கியும், பீச் சர்ட் அணிந்து கச்சேரியில் திரு. டி.எம். கிருஷ்ணா பாடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சமீபத்தில் கிறிஸ்துமஸ் தினத்தன்று காலை மியூசிக் அகாடமியில் நடந்த கச்சேரியில் அவர் பாடிய பாடல்களை கேட்க அரங்கமே நிரம்பி வழிந்தது. இறுதியாக அரங்கத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி உற்சாகமூட்டியதை எவரும் மறந்திட இயலாது.
அவரது இசை கச்சேரியில் தந்தை பெரியார், நாராயண குரு, எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோரின் பாடல்களை பாடி கர்நாடக இசை கச்சேரியில் புரட்சியை புகுத்தியவர். கர்நாடக இசை என்பது குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைக்கப்பட்டிருந்ததை மீட்டு அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக மாற்றியவர் திரு. டி.எம். கிருஷ்ணா. அதனால், அவர்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் மியூசிக் அகாடமி வழங்குகிற எம்.எஸ். சுப்புலட்சுமி சங்கீத கலாநிதி விருதை வழங்கக் கூடாது என்று வழக்கு தொடுத்தனர். ஆனால், உச்சநீதிமன்றம் விருதை வழங்கலாம் என்று தீர்ப்பு வழங்கிய பிறகு தற்போது அவருக்கு அந்த விருது வழங்கப்படுகிறது.
இத்தகைய துணிச்சல்மிக்க திரு. டி.எம். கிருஷ்ணா அவர்களுக்கு இந்து குழுமமும், மியூசிக் அகாடமியின் தலைவர் திரு. என். முரளியும் உற்ற துணையாக இருந்து சங்கீத கலாநிதி என்ற விருதை திரு. டி.எம். கிருஷ்ணா அவர்கள் பெறுவதற்கு ஆதரவாக இருந்ததற்காக அவர்களை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். சமூக, கலாச்சார, சீர்திருத்த கருத்துகளை பொதுவெளியில் துணிந்து பேசக் கூடிய பேராற்றல் மிக்க திரு. டி.எம். கிருஷ்ணா அவர்களின் பணி சிறக்க தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன்.