பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ₹10 லட்சம் வழங்கப்படும். – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே எஸ் அழகிரி அவர்கள் அறிவிப்பு

அறிக்கை | 04 May 2022

இலங்கையை ஆளுகிற அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோரின் தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக ஒட்டுமொத்த இலங்கை மக்களும் கடுமையான வறுமையில் சிக்கித் தவித்து வருகிறார்கள். அன்னியச் செலாவணி கையிருப்பு இல்லாத நிலை, கொரோனா நெருக்கடியால் தொழில் முடக்கம் என பல்வேறு காரணங்களால் கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவித்து வருகிறது. இதன் காரணமாக அரிசி, சமையல் எண்ணெய், கோதுமை, ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இலங்கை மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சீரழிக்கப்பட்ட நிலையில் இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கடுமையான போராட்டங்களை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. இலங்கை அரசை ஆதிக்கம் செலுத்தி வருகிற ராஜபக்சே குடும்பத்தினர் மீது இலங்கை மக்கள் கடும் சினத்தோடு தெருக்களில் இறங்கிப் போராடி வருகிறார்கள். இதை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை அரசு திக்குமுக்காடி வருகிறது.

இந்நிலையில், இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி 123 ரூபாய் கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசிடம் அனுமதி கோரினார். அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதையொட்டி,  இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக 80 கோடி ரூபாய் மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசி, 28 கோடி ரூபாய் மதிப்புள்ள 13 உயிர் காக்கும் மருந்துகள், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சிறுவர்களுக்கான 500 டன் பால் பவுடர் ஆகியவற்றை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. தமிழக முதலமைச்சரின் இத்தகைய மனிதாபிமான நடவடிக்கைகள் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறது.

இலங்கை மக்களுக்கு உதவ நிதி வழங்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்ததோடு, தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்திருப்பதை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

 கடந்த காலங்களிலும் இலங்கைத் தமிழர்கள் இத்தகைய இன்னல்களைப் பெருமளவில் அனுபவித்திருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 1987 ஆம் ஆண்டு அன்றைய இலங்கை அரசு யாழ்ப்பாணம் பகுதி முழுவதற்கும் பொருளாதாரத் தடையை விதித்தது. ராணுவத்தின் மூலமாக தாக்குதலை நடத்தியது. இதனால் இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வாழ்கிற தமிழர்கள் அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை காரணமாக கடும் அவதிக்குள்ளானார்கள். இலங்கைத் தமிழர்களின் துயரைத் துடைப்பதற்காக பிரதமர் ராஜிவ் காந்தி ஆணையிட்டதன் பேரில் ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து உணவுப் பொருட்கள், எரிபொருள் ஏற்றிய 19 படகுகள் ஜூன் 1987 அன்று இலங்கையின் வடக்கு பகுதிக்கு அனுப்பப்பட்டன. ஆனால், நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த படகுகளை இலங்கை அரசின் கடற்படை அனுமதிக்காமல் தடுத்து விட்டது. இதனால், நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற இந்திய அரசின் படகுகள் ராமேஸ்வரம் நோக்கித் திரும்பி வர வேண்டிய நிலை ஏற்பட்டது.

பொருளாதாரத் தடையினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு எந்த வகையிலாவது மனிதாபிமான அடிப்படையில் உதவிகளைச் செய்ய வேண்டுமென்று அன்றைய பிரதமர் ராஜிவ்  காந்தி முடிவெடுத்தார். அதன்படி, பெங்களூர் விமான தளத்திலிருந்து பாதுகாப்புடன் அனுப்பப்பட்ட 5 இந்திய விமானங்கள், இலங்கையின் ஆகாய பகுதிக்குள் பாராசூட் மூலம் அத்துமீறிப் பிரவேசித்து வடக்கு மாகாணத்தில் வாழ்கிற இலங்கைத் தமிழர்களுக்கு 24 டன் நிவாரணப் பொருட்கள் பூமியை நோக்கி மக்கள் பெறுகிற வகையில் கீழே போட்டன. உண்ண உணவின்றி அல்லலுற்ற அப்பாவித் தமிழர்கள், இந்திய அரசு வழங்கிய உணவுப் பொருட்களைப் பெற்று மகிழ்ச்சிக் கடலில் திளைத்ததோடு, உணவின்றி வாடிய நிலையில் உணவளித்த இந்திய அரசுக்கு இலங்கைத் தமிழர்கள் நன்றி தெரிவித்தனர். இந்த நடவடிக்கை ‘ஆபரேஷன் பூமாலை’ என்று அழைக்கப்பட்டது.

பிற்காலத்தில் இலங்கை அரசு இந்திய அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி உடன்பாடு காண இந்த நடவடிக்கை வழி ஏற்படுத்தியது. எப்பொழுதெல்லாம் இலங்கைத் தமிழர்கள் மற்றும் மலையக தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் மத்தியில் ஆட்சி செய்கிற காங்கிரஸ் அரசு  பல்வேறு உதவிகளைச் செய்து வந்திருக்கிறது. அதைப் போல, இன்றைக்கு தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை நடத்தி வருகிற முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இலங்கைத் தமிழர்கள் எதிர்கொள்கிற இன்னல்களைப் போக்கிடும் வகையில் நிவாரணப் பொருட்களை தமிழக அரசு சார்பில் வழங்குவதோடு, தி.மு.க.வின் சார்பில் நிதி வழங்குகிற முயற்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் துணை நிற்க விரும்புகிறது. அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  தமிழக முதலமைச்சரின் அறிவிப்புக்கு ஈடுகொடுக்கிற வகையில், தமிழக மக்கள் அனைவரும் நிதியுதவி வழங்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

கே.எஸ். அழகிரி