சுதந்திரப் போராட்டத்தின் போது, 1938 ஆம் ஆண்டு லக்னோவில் நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளை ஜவஹர்லால் நேரு தொடங்கினார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து குரல் கொடுத்து பல்வேறு அடக்குமுறைகளை நேஷனல் ஹெரால்டு சந்தித்தது. சுதந்திரத்திற்கு பிறகு நேஷனல் ஹெரால்டு வெளியிட்டதில் ரூ.90 கோடி அளவுக்குக் கடன் ஏற்பட்டதால் நேஷனல் ஹெரால்டு வெளியிட்ட 3 செய்தித்தாள்களும் 2008 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது.

13-Apr-2025

அறிக்கை

சுதந்திரப் போராட்டத்தின் போது, 1938 ஆம் ஆண்டு லக்னோவில் நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளை ஜவஹர்லால் நேரு தொடங்கினார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து குரல் கொடுத்து பல்வேறு அடக்குமுறைகளை நேஷனல் ஹெரால்டு சந்தித்தது. சுதந்திரத்திற்கு பிறகு நேஷனல் ஹெரால்டு வெளியிட்டதில் ரூ.90 கோடி அளவுக்குக் கடன் ஏற்பட்டதால் நேஷனல் ஹெரால்டு வெளியிட்ட 3 செய்தித்தாள்களும் 2008 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. இதற்காக கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யங் இண்டியன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு, அப்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ராகுல் காந்தி கம்பெனியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்த நிறுவனத்தில் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் 76 சதவிகித பங்குதாரர்கள். மீதமுள்ள 24 சதவிகிதப் பங்குகளை மறைந்த காங்கிரஸ் தலைவர்கள் மோதிலால் வோராவும், ஆஸ்கர் பெர்ணான்டசும் வைத்திருந்தனர். அனைத்துப் பரிவர்த்தனைகளும் சட்டப்பூர்வமாகவும் வெளிப்படையாகவுமே நடந்துள்ளன. அதன் பிறகு காங்கிரஸ் கட்சி செய்த நிதி உதவியின் காரணமாக 2016 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி 3 செய்தித்தாள்களையும் மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

அசோசியேட்டடு ஜர்னல் லிமிடெட் நிறுவனத்தின் சொத்துகளை யங் இண்டியன் பிரைவேட் லிமிடெட்டுக்கு மாற்றியதில் பண மோசடி நடந்துள்ளதாக கடந்த 2012 ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றத்தில் தனி புகாரை சுப்பிரமணியன் சாமி கொடுத்தார். அதன்பிறகு, மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., இந்த வழக்கை அரசியல் லாபத்துக்காக அமலாக்கத்துறை மூலம் பயன்படுத்தி வருகிறது.

யங் இண்டியன் பிரைவேட் லிமிடெட் என்பது அறக்கட்டளையாகத் தான் தொடங்கப்பட்டது. எந்த லாப நோக்கத்துக்காகவும் தொடங்கப்படவில்லை. இதில் எந்தப் பணப்பரிமாற்றமும் நடைபெறாத நிலையில் பணமோசடி வழக்கு என்பது விசித்திரமாக இருக்கிறது. சுப்பிரமணியன் சாமியை ஏவிவிட்டு பழிவாங்கல், அற்பத்தனம், மலிவான அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள். எந்த பண பரிவர்த்தனையும் நடக்காத நிலையில் சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நேஷனல் ஹெரால்டு சொத்தை கைப்பற்ற நோட்டீஸ் அனுப்புவது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கையாகும்.

நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளை யங் இந்தியா நிறுவனம் வாங்கியது ஒரு சாதாரண வர்த்தக நடவடிக்கைதான். இதில் நம்பிக்கை மோசடிக்கோ, குற்றச் சதிக்கோ அல்லது யாரையும் ஏமாற்றியிருப்பதற்கோ இடமில்லை. தனிப்பட்ட நிறுவனத்தின் பணப்பரிமாற்றங்கள் மீது சம்பந்தமில்லாத நிலையிலும், மூன்றாம் நபருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத சூழலிலும் எவரும் கேள்வி எழுப்ப முடியாது என ஏற்கெனவே பல நீதிமன்றங்களில் அளிக்கப்பட்ட தீர்ப்புகள் முன்னுதாரணமாக இருக்கின்றன. லாபநோக்கமில்லாத 25 வது பிரிவின்படி உருவாக்கப்பட்ட யங் இந்தியா நிறுவனம் அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் தான் செயல்பட்டு வருகிறது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை அபகரிக்கும் நோக்கத்தில் அமலாக்கத்துறை மூலம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமான 661 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை கைப்பற்றி, கபளீகரம் செய்வதற்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. தலைநகர் தில்லி, மும்பை, லக்னோவில் உள்ள நேஷனல் ஹெரால்ட் அலுவலக சொத்துகளை கைப்பற்றுவதற்கு இதன்மூலம் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

2016 ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை தொடுத்த வழக்கில் ஆஜராவதற்கு அன்னை சோனியா காந்தி அவர்களுக்கும், தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கும் உச்சநீதிமன்றம் விலக்கு அளித்தது. கடந்த 2019 ஏப்ரல் 5 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அசோசியேட் ஜர்னல் நிறுவனத்திற்கு எதிரான அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு தடை விதித்தது. அதேபோல டெல்லி உயர்நீதிமன்றம் நேஷனல் ஹெரால்டு வழக்கை நடத்துவதற்கு தடை விதித்து அடுத்த விசாரணை 28 ஜூலை 2025 க்கு ஒத்தி வைத்திருக்கிறது. இந்நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை சொத்துகளை கைப்பற்றுவதற்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பது பா.ஜ.க.வின் அப்பட்டமான பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது. பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வெற்றி பெற்ற நேரு பாரம்பரிய தலைமையில் வந்த அன்னை சோனியா காந்தியும், தலைவர் ராகுல்காந்தியும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளை நீதிமன்றத்தின் மூலம் முறியடித்துக் காட்டுவார்கள். அவர்களுக்கு பின்னால் லட்சோபலட்சம் காங்கிரஸ் கட்சியினர் அணிவகுத்து நிற்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ