பா.ஜ.க. எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் கல்லூரி மாணவிகளிடம் ‘செல்பி வித் அண்ணா’ என்று பரப்புரை மேற்கொள்வது மிகுந்த வெட்கக் கேடானது. கடும் கண்டனத்திற்குரியது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 15 July 2022

தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற வைப்பதற்கு பல்வேறு அதிரடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்தும் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. எட்டு ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிற நிலையிலும், பொருளாதார பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிற சூழலிலும் பா.ஜ.க. மீது மக்கள் கடும் சினத்துடன் உள்ளனர். இதனால், தமிழக மக்களிடம் பா.ஜ.க. செல்கிற போது பல்வேறு பிரச்சினைகள் எழுந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு வித்திடுகின்றன.

திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. மகளிரணி சார்பில் ‘செல்பி வித் அண்ணா’ என்று போட்டி நடத்தப்படுவதாகவும், அதில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்கள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என அழைக்கும் உறுப்பினர் சேர்க்கை முகாம் அந்தப் பகுதியிலுள்ள அரசு கல்லூரிகளில் நடத்தப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதனடிப்படையில் பா.ஜ.க.வினர் கல்லூரி வளாகத்தில் துண்டு பிரசுரங்களை விநியோகித்த போது, கல்லூரிப் பேராசிரியர்களும், மாணவிகளும் இங்கே பரிட்சை நடந்து கொண்டிருக்கும் போது இத்தகைய முயற்சிகளில் ஏன் ஈடுபடுகிறீர்கள் என்று வாக்குவாதம் செய்தனர். பா.ஜ.க.வினரோடு கடுமையான மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து கல்லூரி முதல்வர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார்.

பா.ஜ.க.வினரின் இத்தகைய மலிவான முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தோன்றிய பிறகு, கல்லூரி வளாகத்திலிருந்து அவர்கள் வெளியேறியுள்ளனர். கல்வி பயில வேண்டிய கல்லூரியில் பா.ஜ.க.வினர் அற்பத்தனமான முயற்சிகளில் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இத்தகைய முயற்சிகளை கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

சமீபத்தில், மதுரை காமராஜர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை பங்கேற்க அழைத்ததோடு, ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் எல். முருகன் அவர்களையும் அழைத்தது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. இதனால், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராகவும், பல்கலைக் கழக இணை வேந்தராகவும் உள்ள திரு. க. பொன்முடி அவர்கள் பட்டமளிப்பு விழாவையே புறக்கணித்தது அனைவரும் அறிந்த ஒன்றாகும். தமிழக ஆளுநர் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பை வைத்துக் கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி, ஒரு நாலாந்தர அரசியல்வாதி போல் நடந்து கொள்வதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏற்கனவே, புதிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் பா.ஜ.க. எடுத்த முயற்சிகளுக்கு, தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. பா.ஜ.க. எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் கல்லூரி மாணவிகளிடம் ‘செல்பி வித் அண்ணா’ என்று பரப்புரை மேற்கொள்வது மிகுந்த வெட்கக் கேடானது. கடும் கண்டனத்திற்குரியது.

கே.எஸ். அழகிரி