இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அன்றைய பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களால் இலங்கை தமிழர்களுக்காக போராடி பெறப்பட்ட 13-வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 19-July-2023

இலங்கை தமிழர்கள் நீண்ட நெடுங்காலமாக அனுபவித்து வந்த இன்னலைப் போக்கிட தீவிர முயற்சிகளை மேற்கொண்டவர் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி. பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், 1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பகுதி முழுவதற்கும் ஆபரேஷன் லிபரேஷன் என்ற பெயரில் இலங்கை அரசு பொருளாதார தடை விதித்ததால் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் அப்பாவி தமிழர்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளானார்கள். இந்நிலையில் இலங்கை தமிழர்களின் துயரை துடைப்பதற்காக பிரதமர் ராஜிவ்காந்தி ஆணையிட்டதன் பேரில் ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து உணவுப் பொருட்கள் மற்றும் எரி பொருட்கள் ஏற்றிய 19 படகுகள் 3.6.1987அன்று இலங்கையின் வடக்கு பகுதிக்கு அனுப்பப்பட்டன. ஆனால், நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த படகுகளை இலங்கை அரசின் கடற்படை அனுமதிக்காமல் தடுத்ததால் இந்திய அரசின் படகுகள் ராமேஸ்வரம் நோக்கி திரும்பி வர வேண்டிய நிலை ஏற்பட்டது.

பொருளாதார தடையினால் பாதிக்கப்பட்ட அப்பாவி இலங்கை தமிழர்களுக்கு உதவிகளை செய்ய வேண்டுமென்று பிரதமர் ராஜிவ்காந்தி முடிவெடுத்து, பெங்களுர் விமான தளத்திலிருந்து 5 இந்திய விமானங்கள் மூலம் இலங்கையின் ஆகாய பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்து பாராசூட் மூலம் வடக்கு மாகாணத்தில் வாழ்கிற இலங்கை தமிழர்களுக்கு 24 டன் நிவாரணப் பொருட்கள் பூமியை நோக்கி கீழே இறக்கப்பட்டன. உண்ண உணவின்றி அல்லலுற்ற அப்பாவி தமிழர்கள், இந்திய அரசு வழங்கிய உணவுப் பொருட்களை பெற்று மகிழ்ச்சி கடலில் திளைத்தனர். தங்களுக்கு உணவளித்த இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர். 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆகாய நடவடிக்கை ‘ஆப்பரேஷன் பூமாலை’ என்று அழைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இனியும் இந்தியாவை பகைத்துக் கொள்வது இலங்கை அரசுக்கு நல்லதல்ல என்று முடிவுக்கு வந்ததனால் உருவானது தான் ‘இந்திய – இலங்கை உடன்பாடு’. இந்த உடன்பாட்டில் இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா அவர்களும் 29.7.1987 அன்று கொழும்பு நகரில் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

இந்திய – இலங்கை உடன்பாட்டினால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு இந்தியாவில் உள்ள மாகாணங்களைப் போல ஒரே மாநில நிர்வாக சுயாட்சியுடன் கூடிய அரசு உருவாகக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. 1956 முதல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்ற நியாயமற்ற நிலை மாறி, தமிழும் ஆட்சி மொழி என்ற சம உரிமை பெற்றது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை பாராளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத்தில் 13-வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இலங்கை தமிழர்களின் உரிமைகளுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த சட்டத் திருத்தம் தான் இன்றைய இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு கவசமாக விளங்கி வருகிறது. ஆனால், அந்த சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசு எந்த முயற்சியும் செய்யாமல் அதை சீர்குலைக்கிற முயற்சியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13-வது சட்டத் திருத்தத்தின்படி, சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழும் ஏழு மாகாணங்கள் உள்ளிட்ட மொத்தம் 9 மாகாணங்களில் அதிகாரப் பரவலை இந்த பிரிவு வழங்குகிறது. இதன்மூலம் தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோரிக்கையான சுயாட்சியை வழங்க இந்த பிரிவு உறுதி செய்கிறது. இந்நிலையில் 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை செயல்படுத்துவதற்கு பதிலாக வளர்ச்சித் திட்டங்கள், அரசியல் அதிகாரப் பரவல் உள்ளிட்ட திட்டங்களை இலங்கை அதிபர் விக்கிரமசிங்கே தமிழ் அமைப்புகள் கூட்டத்தில் முன்வைத்திருக்கிறார். இதன்மூலம் போகாத ஊருக்கு அவர் வழிகாட்டியிருக்கிறார்.

இலங்கை அதிபர் விக்கிரமசிங்கே கோரிக்கையை தமிழ் அமைப்புகள் நிராகரித்திருக்கிறார்கள். அதோடு, போலீஸ் அதிகாரம் இல்லாமல் 13-வது சட்டத் திருத்தம் அமல்படுத்தப்படும் என்பதும் இலங்கை அரசின் திட்டமாக இருக்கிறது. இலங்கை அரசு கடந்த காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை சுட்டிக்காட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், சர்வதேச சமுதாயத்திற்கும் இலங்கை தமிழர்களின் தலைவர் ஆர்.என்.சம்மந்தன் கடிதம் எழுதியிருக்கிறார். நிலப் பதிப்பு மற்றும் போலீஸ் அதிகாரத்தை பறிப்பதும் இலங்கை அரசின் நோக்கமாக இருக்கிறது. இதன்மூலம் மாகாணங்களுக்கு சுயாட்சியை வழங்க வழிவகையும் செய்யும் 13-வது சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு தொடர்ந்து முடக்கி வருவதையும் தமது கடிதத்தில் பிரதமர் மோடிக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, ஜூலை 21 ஆம் தேதி இந்திய பிரதமரை சந்திக்க வருகிற இலங்கை அதிபர் விக்கிரமசிங்கேவிடம் தங்களது உரிமைகளை வலியுறுத்தி பாதுகாப்பு தர வேண்டுமென்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியிருக்கிறார். எனவே, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அன்றைய பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களால் இலங்கை தமிழர்களுக்காக போராடி பெறப்பட்ட 13-வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஏற்கனவே இந்தியாவுக்கு இலங்கை அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அன்றைய பிரதமர் ராஜிவ்காந்தி அவர்கள் பெற்றுத் தந்த உரிமைகள், பிரதமர் மோடி ஆட்சிக் காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்பட்டு, முடக்கப்பட்டு வருவதை பிரதமர் மோடி உணர்ந்து செயல்பட வேண்டும்.

தலைவர் திரு கே எஸ் அழகிரி