அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படியும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் எனது தலைமையில் நாளை (21.6.2024) மாலை 3.00 மணியளவில் சென்னை துறைமுகம் எதிரில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

20-June-2024

அறிக்கை

ஒன்றியத்தில் பா.ஜ.க. அரசும், தமிழகத்தில் அ.தி.மு.க. அரசும் ஆட்சி செய்த 2017 ஆம் ஆண்டு தொடங்கி இந்தியாவில் நீட் தேர்வு முறை இருந்து வருகிறது. நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பல கட்டங்களாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. மேலும், நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து அக்குழுவின் பரிந்துரைகளை சட்ட மசோதாவாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மூலம் மேதகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான ஒப்புதலைப் பெற முடியவில்லை. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு நீட் தேர்வில் 720 / 720 மதிப்பெண் பெற்றவர்கள் இரண்டு மாணவர்கள் தான். 2022 ஆம் ஆண்டை பொறுத்தவரை பூஜ்ஜியம், 2023 இல் 2 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர். இந்த ஆண்டு கூடுதலாக 67 மாணவர்கள் என்று வெளிவந்திருக்கிறது. இதில் பல்வேறு குளறுபடிகளும், குழப்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன. தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகள் பல்வேறு சர்ச்சைகளுக்கும், குழப்பங்களுக்கும் இடமளித்திருக்கிறது. இயல்புக்கு மாறாக தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண் வழங்கியதிலும் குளறுபடிகள் ஏற்பட்டு உச்சநீதிமன்றம் அதை ரத்து செய்து, மறு தேர்வு நடத்த ஆணையிட்டிருக்கிறது. ஆனால், இந்த மதிப்பெண்கள் 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால், 2017 ஆம் ஆண்டிற்கு பிறகு தான் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது. 2018 ஆம் ஆண்டு தீர்ப்பினை பொறுத்தவரை அது நீட் தேர்வுக்கான தீர்ப்பே இல்லை. வேறொரு தேர்வுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை நீட் தேர்வுக்கு பயன்படுத்துவது அப்பட்டமான முறைகேடாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் என்கிற இடத்தில் ஒரு தேர்வு மையத்தில் இருந்து மட்டும் 8 பேர் முதல் 100 இடங்களில் இடம் பெற்றிருக்கிறார்கள். அதில் 6 பேர் 720 /720 மற்றும் மீதமுள்ள 2 பேர் 718, 719 என்கிற வகையில் மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். இப்படி நடப்பதற்கு சாத்தியமேயில்லை. எங்கெல்லாம் தவறு நடந்ததோ அதை கண்டுபிடிப்போம் என்று தேசிய தேர்வு முகமை கூறுகிறது. எல்லா தவறுகளுக்கும் தேசிய தேர்வு முகமை துணை போயிருக்கிறது. கருணை அடிப்படையிலான மதிப்பெண்கள் வழங்குவதற்கு எந்த அடிப்படையில் முடிவெடுத்தார்கள் என்று தெரியவில்லை. தேசிய தேர்வு முகமை நம்பகத்தன்மையை முற்றிலும் இழந்திருக்கிறது.

இந்நிலையில் நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் அளித்ததில் முறைகேடுகள் என நாடு முழுவதும் உருவாகியிருக்கிற எதிர்ப்பை வீதி முதல் நாடாளுமன்றம் வரை நீட் தேர்வு ஊழலை எழுப்புவோம் என்று தலைவர் ராகுல்காந்தி கூறியிருக்கிறார்.

25 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிரதமர் மோடி இதுவரை மவுனம் சாதித்து வருகிறார். எனவே தலைவர் ராகுல்காந்தியின் விருப்பத்திற்கு இணங்கவும், அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படியும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் எனது தலைமையில் நாளை (21.6.2024) மாலை 3.00 மணியளவில் சென்னை துறைமுகம் எதிரில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. எஸ். ராஜேஷ்குமார் உள்ளிட்ட முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் கண்டன உரை நிகழ்த்துகிறார்கள். இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் இந்நாள் – முன்னாள் உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் உள்ளிட்ட பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பார்கள்.

நீட் தேர்வை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தொடர்ந்து நீட் தேர்வு திணிப்பை ஒன்றிய பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தோன்றிய எதிர்ப்பு நாடு முழுவதும் இன்றைக்கு கடும் எதிர்ப்பாக மாறியிருக்கிறது. எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மருத்துவ கல்லூரிக்கான நுழைவு தேர்வு நடத்தும் அதிகாரத்தை அந்தந்த மாநில அரசுளுக்கே வழங்க வேண்டுமென்ற தலைவர் ராகுல்காந்தியின் வாக்குறுதியை நிறைவேற்றுகிற வகையில் நமது கண்டனக் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுமென அன்போடு அழைக்கிறேன்.

– தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ