காங்கிரஸ் கட்சி உள்ளடக்கிய தேசிய கூட்டணியை உருவாக்குவதன் மூலம் பா.ஜ.க. கட்சியை 2024 இல் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்காக தமிழக முதல்வரை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார பாராட்டுகிறேன், நன்றி கூறுகிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை  28-Dec-2022

இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் 138-வது ஆண்டு நிறுவன நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிற வேளையில், தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தருகிற வகையில் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு காங்கிரஸ் கட்சி குறித்து பேட்டி அளித்திருக்கிறார்.

இதில், இந்தியாவின் பழமை வாய்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் தன்னுடைய முக்கியத்துவத்தை இழந்துவிடவில்லை என்று கூறியதோடு, காங்கிரஸ் கட்சி உள்ளடக்கிய தேசிய கூட்டணியை உருவாக்குவதன் மூலம் பா.ஜ.க. கட்சியை 2024  இல் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார். இது மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது. அதற்காக தமிழக முதல்வரை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார பாராட்டுகிறேன், நன்றி கூறுகிறேன்.

‘இந்திய ஒற்றுமைப் பயணத்தின் மூலம் இந்திய தேசிய காங்கிரசை சகோதரர் ராகுல்காந்தி அவர்கள் சரியான பாதையில் வழிநடத்தி செல்கிறார்’ என்று கூறியதோடு, வகுப்புவாத பா.ஜ.க.வுக்கு பொருத்தமான மாற்று மருந்தாக அவர் திகழ்கிறார் என்றும் திரு. மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார். தேசிய அளவிலான கூட்டணி அமைத்து பா.ஜ.க.வை எதிர்ப்பதன் மூலமே அரசமைப்புச் சட்டம் உருவாக்கிய நிறுவனங்களை பாதுகாக்க முடியும் என்று கூறியதன் மூலம் அவரது தெளிவான அணுகுமுறை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் திரு. ராகுல்காந்தி அவர்களின் நடைபயணத்தை திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து 110 நாட்களை கடந்து மக்கள் பேராதரவோடு எழுச்சிமிக்க பயணமாக நடைபெற்று வருகிறது. மக்கள் பேராதரவு குவிந்து வருவது அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது. இதுகுறித்து கருத்து கூறிய திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், திரு. ராகுல்காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமைப் பயணம் நாட்டு மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறி அவரை மனதார பாராட்டியிருக்கிறார்.

கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி திரு. ஆ. கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு எனும் நூல் வெளியீட்டு விழாவில் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை, தமிழகத்தைக் கடந்து தேசிய அளவில் கருத்தியல் ரீதியாக எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  திராவிட முன்னேற்ற கழகத்தின் வகுப்புவாத எதிர்ப்பு கொள்கையை உறுதிப்படுத்துகிற வகையில் ‘கோட்சேகளின் வாரிசுகளுக்கு மகாத்மா காந்தி, நேருவின் வாரிசுகளின் பேச்சுகளை பார்த்தால் கசக்கத்தான் செய்யும். ஆனால், காலம் மகாத்மா காந்தியை, நேருவை நினைவூட்;டிக் கொண்டே இருக்கும் என்பதன் அடையாளமாகத் தான் இந்த புத்தகம் அமைந்திருக்கிறது’ என்று பாராட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். இத்தகைய உரைகளின் மூலம் 2003 இல் அன்னை சோனியா காந்தியும், முத்தழறிஞர் கலைஞர் அவர்களும் இணைந்து உருவாக்கிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை மேலும் வலிமைப்படுத்தி, வழிநடத்துகிற வகையில் அதே கொள்கை பாதையில் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் செயல்படுவது தமிழகத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு அரசியல் எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

– தலைவர் திரு கே.எஸ். அழகிரி