கடந்த காலத்தில் தாழ்ந்த நிலையில் இருந்த தமிழகம் நிமிர்ந்த நன்னடை போடுகிற வகையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழக முதலமைச்சரை பாராட்டுகிறேன் – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழக முதலமைச்சராக திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றது முதற்கொண்டு, நாள்தோறும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு சாதனைகளை படைத்து வருகிறார். இதன்மூலம், தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த காலத்தில் தாழ்ந்த நிலையில் இருந்த தமிழகம் நிமிர்ந்த நன்னடை போடுகிற வகையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

 

தமிழகத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்களில் முதன்மையானவராக விளங்கிய வகையில் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்ட செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் என்று அரசு அறிவித்திருப்பதை தமிழக காங்கிரஸ் சார்பாக மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். மேலும், வ.உ.சி. அவர்களின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பெயரில் ரூபாய் 5 லட்சம் ரொக்க பரிசுடன் கப்பலோட்டிய தமிழன் விருது, கோவை பூங்காவில் வ.உ.சிக்கு சிலை, தூத்துக்குடியில் உள்ள சாலைக்கு வ.உ.சி.யின் பெயர் என அவருக்கு புகழ் மாலை சூட்டுகிற வகையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதேபோல, தமிழ்ச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்த பன்முக ஆற்றல் கொண்ட அயோத்திதாசருக்கு வடசென்னையில் மணிமண்டபம் கட்டுவது மிகவும் பொறுத்தமாகும். கடந்த காலங்களில் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் உரிமைகளை பாதுகாத்திடவும் அயராது உழைத்த அயோத்திதாசருக்கு பெருமை சேர்க்கிற வகையில் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சரை பாராட்டுகிறேன்.

 (கே.எஸ். அழகிரி)