அறிக்கை 18 April 2023
மக்களவை காங்கிரஸ் உறுப்பினராக 1952 முதல் மூன்று முறையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், பட்டியலின மக்களின் பாதுகாவலராகவும் விளங்கிய பெரியவர் திரு. எல். இளையபெருமாள் அவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் வருகிற ஜூன் 26 முதல் நூற்றாண்டு விழா கொண்டாடுவதென முடிவு செய்து, சிதம்பரத்தில் அவரது நினைவை போற்றுகின்ற வகையில் மணி மண்டபம் கட்டுவதென அறிவித்திருக்கிறார். இதனை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நன்றிப் பெருக்கோடு வரவேற்கிறேன். ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவரோடு இணைந்து பணியாற்றியவன் என்ற முறையில் இந்த அறிவிப்பை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
தமது வாழ்நாள் முழுவதும் பட்டியலின மக்களின் நலனுக்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் அனைத்து மக்களையும் நேசிக்கக் கூடிய மனித நேயமிக்கவராக வாழ்ந்து, சமூக நீதிக் காவலராக விளங்கிய திரு. எல். இளையபெருமாள் அவர்களது புகழை பரப்புகிற முயற்சியை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அனைவரது பாராட்டுகளையும் பெறுவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
– கே எஸ் அழகிரி