அறிக்கை 18-May-2023
கடந்த மார்ச் 11 ஆம் தேதி நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்திற்கு அருகில் உள்ள கரப்பாளையத்தில் நித்யா என்ற பெண் மர்மமான முறையில் மரணமடைந்ததையொட்டி, அந்தப் பகுதியில் பதட்டமான சூழல் உருவாகியது. மேலும், அந்த பெண் அப்பகுதியில் உள்ள குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அப்பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அந்தப் பெண்ணின் குடும்பத்தினரும், அச்சமுதாய மக்களும் உடலை வாங்க மறுத்து விட்டனர். பிறகு காவல்துறையினரின் சமரச முயற்சியின் காரணமாக சடலத்தை பெற்றுக் கொண்டனர். ஆனால், அதனைத் தொடர்ந்து சில விரும்பத்தகாத வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோவை சரக உயர் காவல்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ள நிலையில் தொடரும் வன்முறைகள் மிகுந்த கவலைக்குரியதாகும். இத்தகைய வன்முறையாளர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டு கடும் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமே அந்தப் பகுதியில் சமூக நல்லிணக்கம் ஏற்பட முடியும்.
எனவே, பரமத்தி – வேலூர், ஜேடர்பாளையம் பகுதியில் நடந்துள்ள விரும்பத்தகாத இந்நிகழ்வுகளின் உண்மை நிலையை கண்டறிய, தமிழக காங்கிரஸ் சார்பில் செயல் தலைவர் திரு. மோகன் குமாரமங்கலம் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திரு. பி.ஏ. சித்திக், திரு. பி. செல்வகுமார், திரு. எஸ்.கே. அர்த்தனாரி, திரு. எம்.பி.எஸ். மணி, திரு. வி.பி வீரப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. மேச்சேரி ஆர். பழனிச்சாமி ஆகியோரைக் கொண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் அந்தப் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வன்முறைக்கான காரணத்தையும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை கண்டுணர்ந்து அதற்கான தீர்வு அடங்கிய அறிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு உடனடியாக வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
– தலைவர் திரு கே.எஸ். அழகிரி