24-Oct-2024
அறிக்கை
தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டதிலிருந்து அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், தமிழக மக்களின் நலன்களுக்கும், கலாச்சார பண்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கின்ற வகையிலும் செயல்பட்டு வருகிறார். இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான கண்டனங்களை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தபோதிலும் அவர் தனது போக்கை மாற்றிக் கொள்வதாக தெரியவில்லை. சமீபத்தில் ஏ.பி.வி.பி. தென் மண்டலத் தலைவர் சவிதா ராஜேஷ் அவர்களை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் செனட் உறுப்பினராக நியமனம் செய்திருக்கிறார்.
அனைத்து துறைகளும் காவி மயமாக்கப்பட்டு வருகிற சூழலில், கல்வித்துறையையும் காவி மயமாக்குகிற முயற்சியாக இந்த நியமனத்தை செய்திருக்கிறார். ஏ.பி.வி.பி. என்பது மாணவர்களிடையே வகுப்புவாத கருத்துகளை பரப்புகிற ஆர்.எஸ்.எஸ். இன் துணை அமைப்பாகும். ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பார்கள். அதைப்போல ஏ.பி.வி.பி. புகுந்த கல்வி வளாகம் சீரழிந்ததாகத் தான் வரலாறே தவிர, உருப்படியான கல்வி வளர்ச்சி ஏற்பட்டதில்லை.
இந்நிலையில் சவிதா ராஜேஷ் அவர்களை செனட் உறுப்பினராக, தமிழக ஆளுநர் நியமித்ததை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த நியமனத்தை அவர் உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
– தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.