நேற்று கர்நாடகாவில் பாரதிய ஜனதாவின் ஆதரவு பெற்ற ஒரு குழு காவிரி நீர் பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுடைய படத்தை வைத்து அவருக்கு இறுதி சடங்குகள் செய்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 27-Sep-2023

நேற்று கர்நாடகாவில் பாரதிய ஜனதாவின் ஆதரவு பெற்ற ஒரு குழு காவிரி நீர் பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுடைய படத்தை வைத்து அவருக்கு இறுதி சடங்குகள் செய்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தைப் பொறுத்தவரை காவிரி ஒழுங்காற்று ஆணையமும், உச்சநீதிமன்றமும் என்ன தீர்ப்பு சொல்லியிருக்கிறார்களோ, அந்த தண்ணீரை நாம் கேட்கிறோம். நீரின்றி பயிர்கள் கருகுகின்றன. தமிழக விவசாயிகள் சொல்லொணா துயரம் அடைகிறார்கள். ஆனாலும் தமிழக மக்களும், தமிழக விவசாயிகளும், தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும் எல்லை மீறாமல், உணர்ச்சியை தூண்ட விடாமல் பொறுப்பான தன்மைகளோடு நம்முடைய கோரிக்கையை வைத்து வருகிறோம்.

ஆனால், கர்நாடகத்தில் வேறு விதமாக இருக்கிறது. அங்கிருக்கிற பாரதிய ஜனதா இதை அரசியலாக்கும் முயற்சியில் இரண்டு மாநில மக்களுக்கிடையே வன்மத்தையும், வன்முறையையும் தூண்டிவிட முயற்சிக்கிறது. தமிழகத்தில் கூட விவசாயிகள் சங்கம் ரயில் மறியல் செய்தார்கள். அதில் வன்முறை நிகழாமலும், அதேநேரத்தில் எல்லை மீறிய ஒருசிலரை மற்றும் அதன் தலைவரை காவல்துறை கைது செய்து தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டது.

இதேபோன்ற ஒரு நிலைமை கர்நாடகத்திலும் வர வேண்டும். அனைத்து கட்சிகளும் அரசியல் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். கர்நாடக மாநில அரசு வன்முறையில் ஈடுபடுகிறவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

வன்முறையும், பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் நடப்பது எளிது. ஆனால், இது ஒரு இறையாண்மையுள்ள தேசம். இக்கட்டான காலங்களில் நாம் பொறுமை காப்பதும், மனித நாகரீகத்தோடு நடந்து கொள்வதும் மிகமிக முக்கியம். அதை கர்நாடகத்தில் உள்ள எதிர்கட்சிகள் பின்பற்ற வேண்டுமென நாங்கள் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். தமிழக முதலமைச்சர் படத்திற்கு அவமரியாதை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கர்நாடக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

தலைவர் திரு கே எஸ் அழகிரி