மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்ற காரணத்தினாலே எதை வேண்டுமானாலும் செய்யலாம், எவரை வேண்டுமானாலும் கட்சியில் சேர்க்கலாம் என்ற ஆணவத்தோடு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செயல்படுவாரேயானால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 28-03-2023

பா.ஜ.க. ஆட்சியில் ஊழல்கள், முறைகேடுகள் விசித்திரமான முறையில் அரங்கேறி வருவதை சமீப காலமாக அம்பலமாகி வருகின்றன. பிரதமர் மோடிக்கும், கௌதம் அதானிக்கும் இருக்கிற உறவு குறித்து தலைவர் ராகுல்காந்தி அவர்கள் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி மக்களவையில் புகைப்பட ஆதாரத்துடன் பேசிய பேச்சு மோடி உள்ளிட்ட பா.ஜ.க.வினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. அதை சகித்துக் கொள்ள முடியாமல் அவரது உரையை சபாநாயகர் அவை குறிப்பிலிருந்து நீக்கி, ஜனநாயக விரோத செயலை செய்திருக்கிறார்.
அன்றைக்கு தலைவர் ராகுல்காந்தி அவர்களின் உரையில் 2014 ஆம் ஆண்டில் உலக பணக்காரர்கள் வரிசையில் 609 ஆவது இடத்தில் இருந்த கௌதம் அதானி, 2022 ஆம் ஆண்டு இறுதியில் உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்திற்கு எப்படி உயர்ந்தார் ? அவரது உயர்வில் பிரதமர் மோடியின் பங்கு என்ன ? என்று குற்றச்சாட்டு கூறியதற்கு இதுவரை பதில் இல்லை.
கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரும், கர்நாடக பொதுத்துறை நிறுவனத்தின் தலைவருமான மாடால் விருப்பாக்ஷப்பா வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனையிட்ட போது, அவரது மகன் பிரசாந்த் ரூபாய் 41 லட்சம் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக லோக் ஆயுக்தா ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது அலுவலகத்தில் ரூபாய் 1 கோடியே 70 லட்சம் ரொக்க லஞ்சப்பணம் கைப்பற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் ரூபாய் 8.1 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டு, மாடால் விருப்பாசப்பா தலைமறைவான பிறகு, நேற்று லோக் ஆயுக்தா ஊழல் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கனவே, கர்நாடக பா.ஜ.க.விற்கு 40 சதவிகித கமிஷன் ஆட்சி என்று பலத்த குற்றச்சாட்டு இருக்கிற நிலையில் இத்தகைய ஊழலில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரே சிக்கியிருக்கிறார். இது கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது.
அதேபோல, தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு ஊழல் பேர்வழிகள், சமூக விரோதிகள் போன்றோர் தங்களை பாதுகாத்துக் கொள்ள புகலிடமாக பா.ஜ.க.வில் சேர்வது தொடர்ந்து நடைபெற்று வருவதை அனைவரும் அறிவார்கள். கடந்த ஒருசில நாட்களுக்கு முன்பு பொருளாதார குற்றப்பிரிவினரால் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு பிரிவு செயலாளராக இருந்த கே. ஹரிஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார். ரூபாய் 2400 கோடி அளவிற்கு முதலீட்டாளர்களை மோசடி செய்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிற ஆரூத்ரா தங்க வர்த்தக நிறுவனத்தின் இயக்குநராக இருப்பவர் தான் கே. ஹரிஷ். இவர் மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூபாய் 210 கோடி முதலீடு பெற்றிருக்கிறார்.
கே. ஹரிஷ் கடந்த 2022, ஜூன் 2 ஆம் தேதி பா.ஜ.க.வின் விளையாட்டுத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே பொருளாதார குற்றப்பிரிவு கே. ஹரிஷ் மீது வழக்கு பதிவு செய்து தேடிக் கொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 2020 முதல் மே 2022 வரை முதலீட்டாளர்களிடமிருந்து டெபாசிட்டாக பெரும் தொகை திரட்டப்பட்டிருக்கிறது. இந்த டெபாசிட் தொகைக்கு 25 முதல் 30 சதவிகிதம் வட்டி தருவதாக கூறி, கோடிக்கணக்கான ரூபாயை முதலீடாக திரட்டி மோசடி செய்திருக்கிறார். பொருளாதார குற்றப்பிரிவு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள கே. ஹரிஷ் என்பவருக்கு பதவி கொடுப்பதில் பா.ஜ.க.வின் விளையாட்டு பிரிவு தலைவர் எஸ். அமர்பிரகாஷ் ரெட்டி மிகுந்த அக்கறை காட்டியிருக்கிறார். முதலீட்டாளர்களை ஹரிஷ் மோசடி செய்துள்ளார் என்று பத்திரிகையாளர்கள் அமர்பிரசாத் ரெட்டியை கேட்ட போது, இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. அவர் விளையாட்டுத்துறையில் மிகச் சிறந்த வல்லவர், அவர் எந்த குற்றத்தையும் நிகழ்த்தவில்லை என்று ஒரு மோசடி குற்றவாளியை பாதுகாக்கிற முயற்சியில் அவர் ஈடுபட்டார்.
முதலீட்டாளர்களை ஏமாற்றி ரூபாய் 2400 கோடி அளவிற்கு மோசடி செய்த கே. ஹரிஷ் என்பவரை பா.ஜ.க.வில் சேர்த்து, பதவி கொடுத்து பாதுகாப்பதில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும், விளையாட்டுத்துறை தலைவர் எஸ். அமர்பிரசாத் ரெட்டியும் இணைந்து செயல்பட்டதில் பின்னணியாக வெளிவருகிற தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியை தருகின்றன. மக்கள் பணத்தை மோசடி செய்தவர்களை பா.ஜ.க. தலைமை ஏன் கட்சியில் சேர்க்கிறது ? ஏன் பாதுகாக்கிறது ? மோசடி குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட கே. ஹரிஷ் என்பவருக்கும், தமிழக பா.ஜ.க. தலைமைக்கும் உள்ள உறவு குறித்து விளக்க வேண்டிய பொறுப்பு அதன் தலைவர்
அண்ணாமலைக்கு இருக்கிறது. இதற்கான உரிய விளக்கத்தை அவர் வெளியிடுவாரா ?
மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்ற காரணத்தினாலே எதை வேண்டுமானாலும் செய்யலாம், எவரை வேண்டுமானாலும் கட்சியில் சேர்க்கலாம் என்ற ஆணவத்தோடு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செயல்படுவாரேயானால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
– தலைவர் திரு கே.எஸ். அழகிரி

 

கே எஸ் அழகிரி