பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடக்கின்ற இத்தருணத்தில் காங்கிரஸ் கட்சி மீது ஏவிவிடப்படுகின்ற வருமான வரித்துறையின் வரி விதிப்பு தீவிரவாத தாக்குதலை கண்டித்து மாநில தலைநகரிலும் மற்றும் அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

29-March-2024

அறிக்கை

இந்திய ஜனநாயகத்தை சீர்குலைக்கின்ற வேலையை மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு திட்டமிட்டு படுபயங்கரமான வேகத்தில் செய்வதை நீங்கள் நன்கு அறிவீர்கள். பாராளுமன்ற பொதுத்தேர்தலை காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டுவரும் இந்த வேளையில், கடந்த பிப்ரவரி மாதம் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை சட்டவிரோதமாக பாஜக அரசு வருமான வரித் துறையின் மூலம் முடக்கியது. அதன் தொடர்ச்சியாக, நேற்று (28.03.2024) வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சிக்கு ரூபாய் 1823.08 கோடி வரிநிலுவை செலுத்த வேண்டும் என்று புதியதாக ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே வருமான வரித் துறை நம்முடைய கட்சியின் வங்கி கணக்கில் இருந்து வலுக்கட்டாயமாக 135 கோடி ரூபாயை சட்டவிரோதமாக அபகரித்துள்ளது. மக்களவை தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியை இதன்மூலம் முடக்கி விடலாம் என்று பாஜக அரசு தப்புக்கணக்கு போட்டுள்ளது.

இதற்காக, தன்னாட்சி அதிகாரம் பெற்ற வருமான வரித்துறையை சட்டவிரோதமாக, தன்னுடைய சுயலாபத்திற்காக பாஜக பயன்படுத்தும் இந்த செயல் மோடியின் தோல்வி பயத்தையே காட்டுகிறது. கடந்த 2017 -18 முதல் 2020- 21ஆம் ஆண்டு காலத்திற்கான ஏற்கனவே தாக்கல் செய்த வருமான வரி கணக்கை தற்பொழுது தூசி தட்டி எழுப்பி சட்ட விரோதமாக ரூபாய் 1823.08 கோடி வருமான வரி பாக்கி என்று இந்த தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மீது பழிவாங்கும் போக்கில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது முற்றிலும் சட்ட விரோதமானது மட்டுமல்லாமல் ஜனநாயகத்தின் அடிப்படையை தகர்க்கின்ற செயலாகும்.

பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடக்கின்ற இத்தருணத்தில் காங்கிரஸ் கட்சி மீது ஏவிவிடப்படுகின்ற வருமான வரித்துறையின் வரி விதிப்பு தீவிரவாத தாக்குதலை கண்டித்து மாநில தலைநகரிலும் மற்றும் அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

எனவே மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் மாவட்ட எல்லைக்குள் நாளை காலை 10 மணிக்கு மோடி தலைமையிலான பாஜக அரசின் ஜனநாயக விரோத மற்றும் பழிவாங்கும் செயலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள், மாநில மற்றும் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் அனைத்துநிலை நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்க செய்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சென்னையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் எனது தலைமையில் நாளை (30.03.2024) சனிக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள், மாநில மற்றும் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் அனைத்து நிலை நிர்வாகிகள் பங்கேற்பார்கள்.

– தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.