தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2 அன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்று மகாத்மா காந்தி, பண்டிதநேரு, அமரர் ராஜிவ்காந்தி ஆகியோர் கண்ட கனவை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

29 SEP 2021 அறிக்கை

மத்திய, மாநில அரசுகளுக்கு அடுத்தகட்டமாக, அடித்தட்டு மக்களோடு நேரடி தொடர்புள்ள அமைப்பாக பஞ்சாயத்துராஜ் விளங்குகிறது. பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் காந்தி கண்ட கனவின்படி, சுயாட்சி அதிகாரம் கொண்ட குடியரசாக செயல்பட வேண்டும் என்பதை செயல்படுத்தியவர் பண்டித ஜவஹர்லால் நேரு. காலப்போக்கில் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் எதிர்பார்த்த பலன் கிடைக்காத நிலையில் செயல்பட்டு வந்தது. இதை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டுமென்று முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பலதரப்பட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளோடு கலந்து பேசி, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுத்தார். அதன் பலனாக அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு பஞ்சாயத்துராஜ் நகர்பாலிகா ஆட்சிமுறை அமலுக்கு வந்தது.

பஞ்சாயத்துராஜ் ஆட்சிமுறையின் பொதுக்குழுவாகவும், அதிகாரமிக்க அமைப்பாகவும் விளங்குவது கிராமசபை. இங்கு எடுக்கின்ற முடிவின்படிதான் கிராம பஞ்சாயத்து செயல்பட முடியும். கிராம பஞ்சாயத்துகளுக்கு அடித்தளமாக விளங்கும் கிராமசபைகளை ஒவ்வொரு ஆண்டும் மகாத்மா காந்தி பிறந்தநாள், சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய மூன்று நாட்களிலும் கட்டாயம் கூட்ட வேண்டும் என்பது சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும். கடந்த ஆட்சியாளர்கள் கிராமசபையைக் கூட்ட விடாமல் முடக்கி வந்தனர். தற்போது, தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, முதல்முறையாக மகாத்மா காந்தி பிறந்த அக்டோபர் 2 ஆம் தேதியன்று கிராமசபை கூட்டங்களை நடத்த வேண்டுமென்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்.

எனவே, தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2 அன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்று மகாத்மா காந்தி, பண்டிதநேரு, அமரர் ராஜிவ்காந்தி ஆகியோர் கண்ட கனவை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

கே.எஸ். அழகிரி