மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கிற பெண்களுக்கு சமஉரிமை, சமவாய்ப்பு வழங்குவதோடு, சட்டத்தில் வழங்கப்பட்ட உரிமைகளை முழுமையாக பெறுகிற வகையில் சூழலை உருவாக்க வேண்டுமென்பதே சர்வதேச மகளிர் தினத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 07 Mar 2022

உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தி

மகளிருக்கான பல்வேறு உரிமைகளை வலியுறுத்திப் போராடி வெற்றி பெற்ற நாள் உலக மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கிற மகளிர் உரிமைகளை பாதுகாப்பதில் காங்கிரஸ் இயக்கம் எப்போதுமே முன்னோடியாக இருந்து வருகிறது. இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி, குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டில், மக்களவை சபாநாயகராக மீராகுமார் ஆகியோரை பதவியில் அமர்த்தியதில் காங்கிரஸ் கட்சிக்கு முழு பங்கு உண்டு. இதன்மூலம் மகளிரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென்பதில் எப்போதுமே காங்கிரஸ் கட்சி முனைப்பாக இருந்து செயல்பட்டு வருகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்து அது தற்போது 50 சதவிகிதமாக உயர்வதற்குக் காரணமாக இருந்து மறைந்த, பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களது கனவை நனவாக்கும் வகையில் நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 33 சதவிகித இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவதற்காக மாநிலங்களவையில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றியவர் அன்னை சோனியா காந்தி. ஆனால், இதை மக்களவையில் இதுவரை நிறைவேற்றாமல் பா.ஜ.க. பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் காங்கிரசின் நோக்கமாகும்.
நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 33 சதவிகித இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவதன் மூலமே மகளிரின் உரிமைகள் பாதுகாக்கப்படும். அவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும். மகளிரின் உரிமைகளை பெறுவதோடு, பொருளாதார ரீதியாக சுயசார்புகளை அடைவதன் மூலமே அவர்களின் வாழ்வு ஏற்றம் பெற முடியும். இந்த லட்சியங்களை அடைவதே உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியாக இருக்க முடியும்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு, பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகிறது. மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கிற பெண்களுக்கு சமஉரிமை, சமவாய்ப்பு வழங்குவதோடு, சட்டத்தில் வழங்கப்பட்ட உரிமைகளை முழுமையாக பெறுகிற வகையில் சூழலை உருவாக்க வேண்டுமென்பதே சர்வதேச மகளிர் தினத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் அனைவரும் ஈடுபட வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக அனைத்து மகளிர் சமுதாயத்தினருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.எஸ். அழகிரி