தமிழக முதலமைச்சர் ஒரு நாள்கூட ஓய்வு எடுக்காமல் கடுமையாக உழைத்து வருவதை எவரும் பாராட்டாமல் இருக்க முடியாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய பணிகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை| 17 Nov 2021

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த தி.மு.க ஆட்சி மக்கள் நலனில் மிகுந்த அக்கறையோடு நாள்தோறும் பணியாற்றி வருகிறது. தமிழக முதலமைச்சர் ஒரு நாள்கூட ஓய்வு எடுக்காமல் கடுமையாக உழைத்து வருவதை எவரும் பாராட்டாமல் இருக்க முடியாது. சிறிய பிரச்சினைகள் முதல் பெரிய பிரச்சினைகள் வரை தெளிவான அணுகுமுறையோடு எதிர்கொண்டு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ஒரு முதலமைச்சர் எப்படிச் செயல்பட வேண்டுமோ அதற்கு முன்னுதாரணமாக செயல்படுவதால் வாக்களித்த மக்களின் பாராட்டுதலை விட, வாக்களிக்காத மக்களும் முதலமைச்சரைப் பாராட்டுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்கள் கனமழையினால்  கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அமைச்சர்கள் குழு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு என்று அமைத்து பாதிப்புகளை ஆய்வு செய்து முதலமைச்சர் அறிக்கையைப் பெற்றிருக்கிறார். அத்தோடு தமது பணி முடிந்துவிட்டது என்று கருதாமல், முதலமைச்சரே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று நிவாரணப் பணிகளை கள ஆய்வு செய்து முடுக்கிவிட்டிருக்கிறார். இதனால் மக்கள் பாதிப்பிலிருந்து மீட்கப்படுகிற சூழல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 1955 ஆம் ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடுமையான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டபோது, அன்றைய முதலமைச்சர் காமராஜர் நேரடியாக அந்தப் பகுதிகளுக்குச் சென்று வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கடுமையாகப் பணியாற்றியதை,  எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அண்ணா பாராட்டியதை எவரும் மறந்திட இயலாது.

அதைப்போல, இன்றைக்கு தமிழக முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதைப் பாராட்ட வேண்டிய கடமையும் பொறுப்பும் எதிர்க்கட்சிகளுக்கு இருக்கிறது. ஆனால், அ.தி.மு.க. தலைவர்கள் நிவாரணப் பணிகளை விமர்சனம் செய்வது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும். கடந்த 2015 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை கடுமையாகப் பெய்த போது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீரை படிப்படியாக வெளியேற்றுகிற முடிவை எடுக்காத காரணத்தால், ஒரே நேரத்தில் முதலில் 18 ஆயிரம் கன அடி நீரும், பிறகு 29 ஆயிரம் கன அடி நீரும் திடீரென முன்னறிவிப்பு இல்லாமல் இரவு நேரத்தில் திறந்துவிடப்பட்டது. இதனால், ஆற்றங்கரையில் வாழ்ந்து வந்த அப்பாவி மக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சோக நிகழ்வு நடந்தது. ஆனால், இன்றைய தமிழக அரசு அதே செம்பரம்பாக்கம் ஏரியில்  இருந்த உபரி நீரை திட்டமிட்டு செயலாற்றி படிப்படியாக திறந்து விட்டதால் பாதிப்பிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய முதலமைச்சரால் அனுப்பப்பட்ட அமைச்சர்கள் குழு அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் சேதம் அடைந்ததற்காக விவசாயிகளுக்கு இழப்பீடாக ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு ரூ.20 ஆயிரம் வழங்குவதாக அறிவித்ததோடு, மறு சாகுபடி செய்திட ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு இருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது. அதேபோல் குறுகிய கால விதைகள், நுண்ணூட்ட உரம் ஆகியவற்றை விவசாயிகளுக்கு வழங்கி, அவர்களது துயரைத் துடைக்கிற பணியில் முதலமைச்சர் ஈடுபட்டு இருக்கிறார். மக்கள் துன்பத்தில் பாதிக்கப்பட்டிருக்கிற போது, எத்தகைய நிவாரணங்களை வழங்க வேண்டுமோ அதை அறிந்து, அதற்கேற்றாற்போல் உதவிகளை அறிவித்து வருகிற முதலமைச்சரின் தொலைநோக்குப் பார்வை அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறது.

தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் மூலமாக 37 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். கனமழை பெய்த ஒரு வார காலத்துக்கு அம்மா உணவகத்தின் மூலம் 14 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றை எல்லாம் பார்க்கிற போது, கடந்த 6 மாத காலமாக தமிழக முதலமைச்சர் மிக அற்புதமாக செயல்பட்டு தமிழக மக்களின் நலனைப் பாதுகாத்து  வருகிறார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய பணிகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம். அவரது பணி மேலும் சிறப்பாக தொடர கட்சி எல்லைகளை கடந்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால், தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பீடு நடைபோடுவதற்கான வாய்ப்பு உருவாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.