ஏற்கெனவே மோடி அரசின் அவசர, அலங்கோல ஜிஎஸ்டி வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட கொங்கு மண்டலம் அதிலிருந்து இன்னும் மீளாத நிலையில், பருத்தி நூல் விலை உயர்வால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 18 May 2022

ஜவுளித் தொழிலின் முக்கிய மூலப்பொருளான பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியின் காரணமாக உள்நாட்டில் பருத்தி தட்டுப்பாடு ஏற்பட்டு வரலாறு காணாத விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மூன்று மாதங்களில் நூல் விலை கிலோ ஒன்றுக்கு 250 வரை கூடுதலாக உயர்ந்துள்ளது.  இதனால் திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஜவுளித் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது.  ஏற்றுமதிக்கு பெறப்பட்ட ஆர்டர்களை தயார் செய்து அனுப்ப முடியாத நிலை உருவாகியுள்ளது. உள்நாட்டு வர்த்தகத்திலும் மிகப்பெரிய தேக்கநிலை ஏற்பட்டுள்ளது லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

மத்திய அரசின் தவறான பஞ்சு ஏற்றுமதி கொள்கையின் காரணமாகவும் ஒரு சில கார்ப்பரேட் கம்பெனிகளின் பதுக்கல் காரணமாகவும் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி லாபம் சம்பாதிக்கிறார்கள். இதற்கு மத்திய அரசு உடந்தையாக இருக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆடை தயாரிப்பு சந்தையில் சர்வதேச கவனம் பெற்ற திருப்பூர் பின்னலாடை துறையில், ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வரை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரலாறு காணாத நூல் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. பின்னலாடை உற்பத்திக்கு அதிகம் பயன்படுத்தும் பருத்தி நூல் கிலோ ரூ. 200 க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.480 வரை உயர்ந்துள்ளது.

பருத்தி நூல் விலையை செயற்கையாக உயர்த்திவிட்டு, செயற்கை நூலிழை சந்தை திருப்பூரில் அடி எடுத்து வைக்க மத்திய அரசு காரணமாக இருக்கிறது.  7 மெகா ஜவுளித்திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த திட்டம் செயற்கை நூலிழை உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவே உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் பின்னலாடைத் துறையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பருத்தி நூல் விலை உயர்வு காரணமாக அனைவரும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

எனவே, பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.  பருத்தியை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்த்து பதுக்கல் காரர்களை கட்டுப்படுத்தி ஜவுளித் தொழிலை காக்க முன்வரவேண்டும். ஏற்கெனவே மோடி அரசின் அவசர, அலங்கோல ஜிஎஸ்டி வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட கொங்கு மண்டலம் அதிலிருந்து இன்னும் மீளாத நிலையில்,  பருத்தி நூல் விலை உயர்வால் தொழில் துறை அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்திலும் தமிழகம் தானே என்று மோடி அரசு அலட்சியப் போக்கை கடைபிடித்தால், அதற்கான விலையை நிச்சயம் தர வேண்டியிருக்கும்.

கே.எஸ். அழகிரி