இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 20 Dec 2021 

தமிழக மீனவர்கள், இந்திய – இலங்கை கடல் எல்லைக்கு அருகே ராமேஸ்வரத்திலிருந்து 537 படகுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் டிசம்பர் 19 ஆம் தேதி மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து எச்சரிக்கை விடுத்ததோடு, ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை சிறைபிடித்து கைது செய்துள்ளனர். அவர்களது 6 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், நேற்று மண்டபம் தெற்கு துறைமுகப் பகுதியிலிருந்து நேற்று சுமார் 40 படகுகளில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மூன்று ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு விசைப்படகுகளில் இருந்த 12 மீனவர்களை கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

ராமேஸ்வரம் பகுதிக்கு மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம் இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்வது, படகுகளை பறிமுதல் செய்வது என தொடர்ந்து அட்டூழியங்களை நடத்தி வருகிறார்கள். மீனவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறார்கள். இலங்கை கடற்படையினரின் இத்தகைய தமிழக மீனவர் விரோத போக்கை கண்டித்து, ராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து மீனவர் சங்க கூட்டமைப்பு சார்பாக காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் குறித்து, தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தின் மூலம் கைது செய்யப்பட்டவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருக்கிறார். இதில் மத்திய அரசு எப்போதும்போல் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ளாமல் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை முக்கியமாக கருதுவதோடு, உடனடியாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

கே.எஸ். அழகிரி