மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் மக்களின் பாதிப்பை உணர்த்துகிற வகையில் வருகிற நவம்பர் 22 முதல் 29 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் மாவட்ட, வட்டார, நகர, பேரூர் அளவில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை மேற்கொள்ள வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 20 Nov 2021
பா.ஜ.க. ஆட்சி மத்தியில் அமைந்து கடந்த 7 ஆண்டுகளாக தவறான பொருளாதார கொள்கை காரணமாக மக்கள் அனைத்து நிலைகளிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடும் விலைவாசி உயர்வால் தவியாய் தவிக்கும் மக்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அதற்கு இணையாகக் குறைக்காமல் கலால் வரியை உயர்த்தி இதுவரை கடந்த 7 ஆண்டுகளில் ரூ. 23 லட்சம் கோடி வரை வசூலித்து மத்திய பா.ஜ.க. அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது. இதைவிடக் கடுமையான மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது.

கடந்த ஓராண்டில் சமையல் எண்ணெய் விலை இருமடங்கு உயர்ந்திருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர்  300 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பெட்ரோல் மீதான கலால் வரியை 250 சதவிகிதம், அதாவது ஒரு லிட்டருக்கு ரூபாய் 9.48 இல் இருந்து ரூபாய் 32.98 ஆக உயர்த்தியுள்ளது. அதேபோல, டீசல் மீதான கலால் வரி 800 சதவிகிதம் உயர்த்தியதால் ஒரு லிட்டருக்கு ரூபாய் 3.65 இல் இருந்து ரூபாய் 31.83 ஆக கலால் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. எரிபொருட்களின் விலையை உயர்த்தி சாதாரண மக்களை வாட்டி வதைக்கும் மோடி அரசு, இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை 30 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக குறைத்துள்ளது. இதனால் மத்திய பா.ஜ.க. அரசுக்கு ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

பா.ஜ.க. அரசின் தவறான கொள்கையின் காரணமாக கொரோனா தொற்றை உரிய முறையில் எதிர்கொள்ளாததால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இதனால், இந்தியாவில் தற்போது 20 கோடி பேர் பட்டினியில் வாடி வருகின்றனர். இது உலக அளவிலான பட்டியலில் நான்கில் ஒரு பங்காகும். 2021 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பட்டினிப் பட்டியலில் மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியா 101 ஆம் இடத்தில் உள்ளது. இதைப் பற்றி பிரதமர் மோடி கவலைப்பட்டதாக தெரியவில்லை. கடந்த 67 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட பொதுத்துறை சொத்துகளை நீண்டகால குத்தகையின் அடிப்படையில் மோடியின் கார்ப்பரேட் நண்பர்களுக்கு தாரை வார்க்க முயற்சி நடைபெறுகிறது. கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது.

மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் மக்களின் பாதிப்பை உணர்த்துகிற வகையில் வருகிற நவம்பர் 22 முதல் 29 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் மாவட்ட, வட்டார, நகர, பேரூர் அளவில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது. அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் ஆலோசனையின்படி நடைபெறும் இப்பிரச்சாரப் பயணத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் கதர் குல்லா அணிந்து, கையில் மூவர்ணக் கொடியையும், கண்டன பதாகைகளையும் தாங்கிக் கொண்டு விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். விடுதலைப் போராட்ட காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சத்தியாகிரகம் எத்தகைய உணர்வுகளை ஏற்படுத்தியதோ, அதைப்போல காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் மக்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணம் அமைய வேண்டும். இந்த பயணம் மக்களிடையே பா.ஜ.க. அரசுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில், காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் பெருந்திரளான வகையில் அணிதிரண்டு பங்கேற்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு எதிராக ஒலிக்கும் காங்கிரசின் குரலாக, மக்களின் எழுச்சியை ஏற்படுத்துகின்ற வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் அமைய வேண்டும்.

மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியின் அவலங்களை பட்டியலிட்டு தயாரிக்கப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தை பொது மக்களிடையே காங்கிரஸ் கட்சியினர் விநியோகம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மக்களிடையே கருத்துகளை திரட்டுவதே இந்த அறப்போராட்டத்தின் நோக்கமாகும். இந்த போராட்டம் வெற்றி பெறுவதன் மூலமாக பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதற்கு தமிழகத்தில் அடித்தளமாக அமைய வேண்டும். தமிழகம் முழுவதும் நடைபெறும் பிரச்சார பயணத்தில் அந்தந்த பகுதியில் உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் முன்னோடிகளை பெருமளவில் திரட்டுகிற பணியை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலந்தூரில் ஏற்பாடு செய்திருக்கிற நிகழ்ச்சியில் நான் பங்கேற்க உள்ளேன்.

கே.எஸ். அழகிரி